ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு: விருதுநகரில் பட்டாசு ஆலைகள் இன்றும் மூடல்!
ஜிஎஸ்டி சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகரில் பட்டாசு ஆலைகள் இன்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
விருதுநகர்: ஜிஎஸ்டி சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகரில் பட்டாசு ஆலைகள் இன்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள ஜி.எஸ்.டி வரி பட்டாசு தொழிலை மிகவும் பாதித்துள்ளதாக அதன் தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.
பட்டாசு தொழிலுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனை குறைக்க பட்டாசு உரிமையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.ஆனால் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனை கண்டித்து கடந்த சில நாட்களாக பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இவர்களுக்கு ஆதரவாக பட்டாசு விற்பனையகங்களும் மூடப்பட்டுள்ளன. பட்டாசு தொழிலுக்கு பெயர் பெற்ற விருதுநகர் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன.
இந்த ஆலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளன. 600-க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனையகங்களும் திறக்கப்பட வில்லை. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.