மக்கள் கைகள் பட்டு மாசு நீங்கிய செய்யாறு..!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் உள்ள செய்யாற்றை சுத்தப்படுத்தும் பணியில் மக்கள் சக்தி களம் இறங்கியுள்ள நிலையில் முதல் கட்ட தூய்மைப்படுத்தும் பணி சிறப்பாக முடிவடைந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பாயும் ஆறுகளில் ஒன்று செய்யாறு. ஜவ்வாது மலையில் உற்பத்தியாகி, மேற்கு தெற்காக பாய்ந்து, செங்கம் அருகில் வடகிழக்காகத் திரும்பி மாவட்டத்தின் முழு நீளத்துக்கும் பாய்ந்து பயன் தருகிறது. இந்த நீரை விவசாயத்துக்கும் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் இன்று ஆற்றின் நிலை பரிதாபமாக காட்சி தருகிறது. முள்காடாகவும், கழிவுநீர் தேங்குமிடமாகவும் மாறி தனது நிலையை இழந்து நிற்கிறது. அதிகாரிகளிடம் முறையிட்டும் ஆற்றை சுத்தப்படுத்தும் அறிகுறியே இல்லாத நிலையி்ல் தற்போதே மக்களே களம் இறங்கி விட்டனற்.
வாட்ஸ் ஆப் மூலம்
செய்யாற்றை மீட்டெடுக்க வாட்ஸ் ஆப் மூலம் மக்கள் சக்தி ஒன்று திரண்டது. செங்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள், பல்துறைப் பிரமுகர்கள் என மக்கள் கை கோர்த்து ஒன்று திறண்டு செயலில் இறங்கியுள்ளனர்.
செங்கம் சீரமைப்புக் குழு
செங்கம் சீரமைப்புக் குழு என்ற பெயரில் ஒருங்கிணைந்த மக்கள் குழு பல்வேறு தரப்பினரையும் திரட்டி செய்யாற்றை சீர்படுத்தும் பணியை சனிக்கிழமை தொடங்கியது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் சீரமைப்புப் பணியின் முதல் கட்டம் விறுவிறுப்பாக அமைந்தது.
முதல் கட்டப் பணி வெற்றி
அனைவரும் இணைந்து களப் பணியில் இறங்கியதால் முதல் கட்டப் பணி வெற்றிகரமாக முடிந்துள்ளது. தொகுதி சட்டசபை உறுப்பினர் உள்பட அனைத்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்களின் ஆதரவுடன் பல்வேறு கட்சிகளும் ஆதரவு கொடுத்ததால் பணி சிறப்பாக நடந்துள்ளது.
அதிகாரிகளும் ஒத்துழைப்பு
அதேபோல பொதுப்பணித்துறை, பேரூராட்சியைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோரும் உள்ளூர் ஊடகங்களின் ஆதரவும் இந்த மக்கள் பணிக்கு வலு சேர்த்தது. காவல்துறையினர், வனத்துறையினர் ஒத்துழைப்பும் பணியை எளிமைப்படுத்தியுள்ளது.
மக்கள் சக்தி
எல்லாவற்றையும் விட இரு வாரங்களாக ஓய்வில்லாமல் அயராது பாடுபட்ட செங்கம் சீரமைப்பு குழுவைச் சேர்ந்த இளைஞர்கள்தான் இந்த பணியின் சிறப்புக்கு முக்கியக் காரணம். வரும் வார இறுதியில் இரண்டாம் கட்டப் பணி துவங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துவோம்!
படங்கள்: டாக்டர் ஸ்ரீதர் முருகையன்