இலங்கையின் நரவேட்டைக்கு பிரிட்ஜோவின் உயிரே கடைசியாக இருக்கட்டும்- மீனவர்கள் ஆவேசம்
இலங்கை கடற்படையினரின் நரவேட்டைக்கு தங்கச்சிமடம் பிரிட்ஜோவின் உயிரே கடைசியாக இருக்க வேண்டும் என்று மீனவர்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் காட்டுமிரண்டித்தனமாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் பிரிட்ஜோவின் உயிரே கடைசியாக இருக்க வேண்டும் என்று தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் கொந்தளிப்புடன் தெரிவித்தனர்.
கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள கடல்பகுதியில் 6 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வாட்டர் ஸ்கூட்டரில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
இதில் பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். மேலும் சரோன் என்பவர் கையில் காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நீதி கிடைக்கும் வரை பிரிட்ஜோவின் அவரது உடலை வாங்க மாட்டோம் என்று மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ராமேஸ்வரத்தில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படை வீரர்களை கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை உடனடியாக மூட வேண்டும், அதில் உள்ள அதிகாரிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் யாரேனும் வந்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும், அதுவரை பிரிட்ஜோவின் உடலை வாங்க மாட்டோம். இலங்கை கடற்படையின் நரவேட்டைக்கு பிரிட்ஜோவின் உயிரே கடைசியாக இருக்க வேண்டும். இழப்பீடுக்காக நாங்கள் போராடவில்லை. இழப்பீடு கொடுத்து எங்களை கொச்சப்படுத்தாதீர் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.