பிரிட்ஜோ படுகொலை.. கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா புறக்கணிப்பு நிச்சயம்... மீனவர்கள் திட்டவட்டம்
தமிழக மீனவர்களை சிறைபிடித்து வரும் இலங்கையைக் கண்டிக்கும் வகையில் கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவை புறக்கணிப்போம் என ராமேஸ்வரம் மீனவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களை சிறை பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்படை தற்போது சுட்டுக் கொல்லவும் துணிந்துவிட்ட நிலையில் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா புறக்கணிப்பு போராட்டத்தை மீனவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்து வைத்துள்ளனர். பாக் நீரிணைப்பு மற்றும் கச்சத்தீவு பகுதிகளில் மீன் பிடித்து வரும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே 83 மீனவர்கள் சிறையில் உள்ளனர். 123க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கான நீதி கேட்டு ராமேஸ்வர மீனவர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கச்சத்தீவு
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் உள்ள கச்சத்தீவில் உள்ள அந்தோணியர் கோயில் திருவிழா புகழ் பெற்றது. ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 18 கடல் மைல் தொலைவிலும் உள்ள இந்த தீவிற்கு சென்று வழிபடுவது ராமேஸ்வர மக்களின் வழக்கமாக உள்ளது.

அந்தோணியார் விழா
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இருநாட்டு மக்களால் கொண்டாடப்படும் புனித அந்தோணியார் திருவிழா இம்மாதம் 11ம் தேதி தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கான அறிவிப்பு நெடுந்தீவு பங்கு தந்தை மூலம் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறக்கணிப்பு
82 தமிழக மீனவர்களும், அவர்களுக்கு சொந்தமான 123 படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கும் வரை கச்சத் தீவு திருவிழாவிற்கு செல்ல மாட்டோம் என்று அனைத்து மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரிட்ஜோ சுட்டுக் கொலை
இந்நிலையில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ படுகொலையை அடுத்து ராமேஸ்வர மக்கள் மேலும் கோபமடைந்துள்ளனர். இதனால் மீனவர்கள் பிரச்சனை ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்படும் வரை கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா புறக்கணிப்போம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications