தாது மணல் எதிர்ப்பாளர்களுக்கு கொலை மிரட்டல்.. மீனவர் அமைப்பு புகார்
தூத்துக்குடி: தாது மணல் ஆலை எதிர்ப்பாளர்களுக்கு சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாக தூத்துக்குடி எஸ்.பி.யிடம் மீனவர் ஐக்கிய முன்னனி புகார் தெரிவித்துள்ளது. இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி மீனவ அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில தூத்துக்குடி குரூஸ் பர்னாதீஸ் பேரவை தலைவர் ஜோசப் பர்ணாந்து தலைமையில் சிலர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள், தாது மணல் ஆலைகள் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், இதனால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மணல் ஆலைகளால் இது வரை யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. எனவே தாது மணல் எடுக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
இதனால் கொந்தளித்த மீனவர் அமைப்புகள் ஜோசப் பர்னாந்து வீட்டு முன்பு கூடி அவரை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சேவியர் பிரான்சிஸ் பெஸ்கி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜோசப் பார்னாநது வீட்டை விட்டு திரும்பி சென்றவர்கள் பாத்திமா நகர் பகுதியில் கூடி ஆலோசனை நடத்தினர். இதில் மீனவர் ஐக்கிய முன்னனி ஓருங்கிணைப்பாளர் சுபாஷ் பர்னாட்டோ, பொருளாளர் ஜாய் காஸ்ட்ரோ, மாநகராட்சி மண்டல தலைவர் செல்வராஜ், மீனவர் விடுதலை இயக்க பொது செயலாளர் அலங்கார பரதர், பேரவை தலைவர் ஹெர்மன் உள்பட கலந்து கொண்டனர்.
இதற்கிடையே மீனவர் ஐக்கிய முன்னனி ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் பர்னாட்டோ தலைமையில் சிலர் எஸ்பி துரையை சந்தித்து புகார் அளித்தனர். அதில் தாது மணல் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் நபர்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது. எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.