சென்னை சுரங்கப்பாதையில் மூழ்கிய பேருந்து... போராடி மீட்ட ஊழியர்கள் - 5 சுரங்கப்பாதைகள் மூடல்
சென்னை: சென்னை மேற்குமாம்பலத்தில் வெள்ள நீர் தேங்கிய சுரங்கப்பாதையில் பயணித்த பேருந்து மூழ்கியதை அடுத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மீட்பு வாகனத்தின் உதவியோடு 4 மணி நேரக் கடும் போராட்டத்துக்குப் பின்னர் அந்த பேருந்தை ஒருவழியாக போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மீட்டு மேலே கொண்டுவந்தனர்.
வியாசர்பாடி ஜீவா அருகே உள்ள சுரங்கப்பாதையில் சூழ்ந்திருந்த வெள்ளத்தில் 45 ஜி பேருந்து சிக்கிக்கொண்டது. இரு பேருந்துகளில் இருந்தும் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். சென்னையில் 5 சுரங்கப்பதைகள் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கனமழை காரணமாக சென்னையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சாலைகளில் ஏற்பட்டுள்ள மேடு, பள்ளங்களால் மாநகர பேருந்து ஓட்டுநர்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
மக்கள் அவதி
கனமழையால் ஜிஎஸ்டி சாலை, வடபழனி - கோயம்பேடு சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, நந்தம்பாக்கம் பூந்தமல்லி சாலை, வேளச்சேரி நெடுஞ்சாலை, மடிப்பாக்கம் சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை ஆகியவை மேடு பள்ளங்களாக காட்சியளித்தன. பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் மாநகர பேருந்து ஓட்டுநர்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிப்பட்டனர்.
மூழ்கிய பேருந்து
சென்னை மாம்பலம் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளது. இன்று காலை இந்த வழியே சென்ற ஒரு பேருந்து நீரில் முழுவதுமாக மூழ்கி அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது. பேருந்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
பேருந்து மீட்பு
இதனிடையே மாம்பலத்தில் அரங்கநாதர் சுரங்கப் பாதையில் மூழ்கிய பேருந்தை மீட்கும் பணியில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஈடுபட்டனர். மீட்பு வாகனத்தின் உதவியோடு 4 மணி நேரக் கடும் போராட்டத்துக்குப் பின்னர் பேருந்தை ஒருவழியாக போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மீட்டு மேலே கொண்டுவந்தனர்.
பயணிகள் மீட்பு
வியாசர்பாடி ஜீவா அருகே உள்ள சுரங்கப்பாதையில் சூழ்ந் திருந்த வெள்ளத்தில் ‘45 ஜி' பேருந்து சிக்கிக்கொண்டது. அங்கிருந்த பொதுமக்கள் அந்த பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதேபோல் சென்னையின் பல்வேறு சுரங்கப் பாதைகளிலும் வெள்ளம் காரணமாக பேருந்துகள் சிக்கிக்கொண்டன.
சுரங்கப்பாதை மூடல்
இதனையடுத்து கணேசாபுரம், தில்லை கங்கா நகர், பழவந்தாங்கல், வியாசர்பாடி, செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆகிய சுரங்கப்பாதைகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதை அடுத்து அவை போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
வியாசர்பாடி, எம்கேபி நகர், அம்பத்தூர், வில்லிவாக்கம், வண்ணாரப்பேட்டை, திருவொற்றி யூர், எண்ணூர், மாதாவரம், கொருக்குப்பேட்டை, பிராட்வே, தி.நகர், திருவான்மியூர், வேளச்சேரி, விஜய நகர், மடிப்பாக்கம், தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளன. சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்கள் மெது வாக ஊர்ந்து சென்றன. பல இடங்களில் பேருந்துகள் பழுதாகி நிற்பதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.