சுரேஷ்குமார் படுகொலை வழக்கு; கைதானவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிறது
சென்னை: சென்னையில் இந்து முன்னணி தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான கொலையாளிகள் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார், கடந்த ஜூன் மாதம் 18-ந் தேதி இரவு சென்னை அம்பத்தூர் எஸ்டேட்டில், படுகொலை செய்யப்பட்டார். மர்ம கும்பல் அவரை வெட்டிக் கொன்று விட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த படுகொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய, 10 தனிப்படைகள் களத்தில் இறக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் துப்பு துலக்கப்பட்டு, ஏற்கனவே குத்புதீன், காஜாமொய்தீன், நசீர் மற்றும் 17 வயது மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். 17 வயது மாணவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில், வியாழக்கிழமையன்று 6 பேர் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டார்கள்.
சுரேஷ்குமாரை வெட்டியவர்கள்
முகமது சமீம் என்ற அப்துல் சமீம் (வயது 24). கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு, அடப்பு விளையைச் சேர்ந்தவர். அங்கு பா.ஜ.க. பிரமுகர் எம்.ஆர்.காந்தி வெட்டப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர். மேலும் கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி, தக்கலை மற்றும் நெல்லை சந்திப்பு ஆகிய பகுதிகளில் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்ட வழக்கிலும் இவர் தொடர்புடையவர். இவர் ஏற்கனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறை சென்றவர்.
இவரது கூட்டாளி செய்யது அலி நவாஸ்(25), இவர் நாகர்கோவில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்தவர். இவர் மீதும் பா.ஜ.க. பிரமுகர் எம்.ஆர்.காந்தி வெட்டப்பட்ட வழக்கு உள்பட 4 வழக்குகள் உள்ளன.
அப்துல் ஹக்கீம்(44). இவர் வேலூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்தவர். இவர்கள் 3 பேரும்தான் நேரடியாக வந்து, சுரேஷ்குமாரை வெட்டி சாய்த்தவர்கள் ஆவார்கள்.
கொலைக்கு சதித்திட்டம்
அபு என்ற அபுதாகீர்(37) சென்னை பாடி, திருவள்ளூர் தெருவைச் சேர்ந்தவர். இந்த கொலை வழக்கில் இவர்தான் சதித்திட்டம் தீட்டி மூளையாக செயல்பட்டார். பாடியில் செல்போன் கடை நடத்தி வந்தார். கொலை திட்டத்தை வகுத்தவுடன், தனது குடும்பத்தை வேறு ஊருக்கு மாற்றி விட்டார். தனது செல்போன் கடையையும் மூடி விட்டார்.
கொலையாளிக்கு அடைக்கலம்
முகமது சமியுல்லா என்பவர் பெங்களூரைச் சேர்ந்தவர். சாதிக்பாட்சா. இவரும் பெங்களூரைச் சேர்ந்தவர்தான். இவர்கள் இருவரும், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, முழு ஆதரவு கொடுத்துள்ளனர்.
தேசிய பாதுகாப்பு சட்டம்
பெங்களூருவில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் சென்னை கொண்டுவரப்பட்டு, ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டனர். அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரியவந்துள்ளது.
ஆதாரங்களுடன் கைது
இவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் விஞ்ஞான ரீதியாக ஆதாரங்களை திரட்டி அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து விட்டோம். சென்னை போலீஸ், சிறப்பு புலனாய்வு குழு மற்றும் பெங்களூரு போலீசார் இணைந்து, பெங்களூரில் 6 குற்றவாளிகளை கைது செய்துள்ளோம்.
கைதானவர்களில் 3 பேர் நேரடியாக கொலையில் சம்பந்தப்பட்டுள்ளனர். 2 பேர் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள். மற்றவர்கள் சதித்திட்டம் தீட்டியவர்கள். இப்படி 3 பிரிவாக உரிய ஆதாரங்களுடன் கொலையாளிகளை கைது செய்துள்ளோம்.
தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு
இவர்கள் தனி குழுவாக செயல்பட்டுள்ளனர். இவர்களுக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக இதுவரை நடந்த விசாரணையில் தெரியவில்லை. இருந்தாலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களின் நடமாட்டம் சென்னையில் இருப்பதாக தகவல் இல்லை. தொடர்ந்து அவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது என்றார்.