இந்த ஸ்பைஸ் ஜெட்டை என்னானு கேளுங்க சார்... '100க்கு' போன் போட்ட சென்னை விமான பயணி
சென்னையில் பனிமூட்டம் காரணமாக விமானம் கிளம்ப தாமதமானதால் நூறு எண்ணுக்கு போன் செய்து போலீசுக்கு புகார் அளித்துள்ளார் பயணி ஒருவர்.
சென்னை: சென்னையில் பனிமூட்டம் காரணாக விமானம் கிளம்ப நேரமானதால் பொறுமையிழந்த பயணி ஒருவர் நூறுக்கு போன் செய்து போலீசாரை உதவிக்கு அழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு குளிரும் பனியும் அதிகரித்து வரும் நிலையில், அடிக்கடி விமானம் மற்றும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் காலையில் மும்பை கிளம்ப வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானம் கிளம்பாமல் கால தாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் மும்பை செல்லும் பயணிகள் அனைவரும் செய்வதறியாமல் தவித்து வந்தனர். இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் விமான நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டும் அவர்கள் முறையான விளக்கமளிக்காத நிலையில், பயணிகள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொறுமையை இழந்த பயணி ஒருவர், நூறுக்கு போன் செய்து போலீசிடம் அவசர உதவியை நாடியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து விமான நிலையத்துக்கு வந்த போலீசார், அவரிடம் பிரச்சனை குறித்து கேட்டறிந்தனர். மும்பை செல்ல வேண்டிய விமானம் காலையிலிருந்து புறப்படாமல் இருப்பதாகவும், மும்பையிலிருந்து வெளிநாட்டிற்கு செல்லவுள்ளதால் தாம் உடனடியாக மும்பை கிளம்ப வேண்டும் என்பதால் உதவிக்கு போலீசாரை அழைத்ததாக அந்த பயணி தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து விமான நிர்வாகத்துடனும், பயணியிடமும் சமரசம் செய்த போலீசார் அவரை மும்பைக்கு அடுத்த விமானத்தில் அனுப்பி வைத்தனர். விமான பயணி ஒருவர் இவ்வாறான பிரச்சனைக்கு போலீசாரை அழைத்தது இதுதான் வரலாற்றிலேயே முதல் முறை என்றும் காவல்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.











Click it and Unblock the Notifications