ஒரே பனிமூட்டமா இருக்கு.. பெங்களூர் செல்ல வேண்டிய விமானங்கள் சென்னையில் தரையிறக்கம்
சென்னை: மழை ஓய்ந்து பெங்களூரில் பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், அந்த நகருக்கு செல்ல வேண்டிய 3 விமானங்கள் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.
பெங்களூரில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால், நவம்பர் மாத பனிப்பொழிவு தாமதமாகி, மழை பொழிந்து கொண்டிருந்தது. நூற்றாண்டிலேயே அதிகபட்ச நவம்பர் மாத மழை இங்கு பதிவானது.

இந்நிலையில், தற்போது வானம், நீல வண்ணத்தில் மேகமூட்டமின்றி தெளிவாக உள்ளது. இதனால், பனிப்பொழிவு அதிகரித்துவிட்டது. வானிலை மோசமாக இருந்ததால் விமானங்கள் சிலவற்றால் இன்று அங்கு, தரை இறங்க முடியவில்லை.
ஓடு பாதையில் விமானத்தை இறக்க கூடிய தெளிவான சூழல் இல்லாததால் பெங்களூர் செல்லக்கூடிய 3 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டு தரை இறங்கின.
மும்பையில் இருந்து 130 பயணிகளுடன் பெங்களூருக்கு வந்த ஜெட் ஏர்வேஸ் விமானம், அபுதாபியில் இருந்து 150 பயணிகளுடன் பெங்களூர் வந்த விமானம், லண்டனில் இருந்து, 300 பயணிகளுடன் பெங்களூர் சென்ற விமானம் போன்றவை சென்னையில் தரை இறங்கின.
இதனால் 3 விமானப் பயணிகளும் சிரமத்திற்கு ஆளானார்கள். சுமார் 3 மணி நேரம் சென்னையில் அவர்கள் இருக்க வேண்டியதாயிற்று. வானிலை சீரடைந்த பிறகு, 3 விமானங்களும் ஒவ்வொன்றாக புறப்பட்டு சென்றன.












Click it and Unblock the Notifications