களேபரமான போயஸ் கார்டன்...போயஸை கிடுகிடுக்க வைத்த தொண்டர்படைகள்!
மறைந்த ஜெயலலிதாவின் இல்லத்திற்கு உரிமை கோரி தீபா தீடிரென சென்ற நிலையில் அங்கு தீபா பேரவைதொண்டர்கள் பலரும் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: அதிமுக கட்சி அலுவலகத்தை யார் முதலில் கைப்பற்றறுவார்கள் என்றே போட்டி வரும் என்று எதிர்பார்த்த நிலையில் ஜெ. தீபா போயஸ் கார்டன் இல்லத்திற்குள் அனுமதிக்கப்படாததால் அணி அணியாக தொண்டர்கள் அங்கு குவிந்தனர்.
போயஸ் கார்டன் வீடு தனக்கு தான் சொந்தம் என்று மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா இன்று அதிரடியாக போயஸ் கார்டன் வீட்டிற்குள் நுழைந்தார். அவருக்கு மன்னார்குடி கும்பல் அனுமதி மறுத்ததால் தீபா போயஸ் கார்டன் வீட்டு வாசலிலேயே தர்ணாவில் ஈடுபட்டார்.
தீபாவிற்கு ஆதரவாக அவரது கணவர் மாதவன் உள்ளிட்டோரும் போயஸ் கார்டன் வந்து மனைவிக்கு பக்கபலமாக நின்றார். ஆனால் உள்ளே செல்ல யாருமே அனுமதிக்கப்படவில்லை. மேலும் தீபா வேதா நிலைய வாசலில் தர்ணா செய்யும் காட்சியை படம்பிடிக்கவும் செய்தி சேகரிக்கவும் போலீசார் பத்திரிக்கையாளர்களை அனுமதிக்கவில்லை.
போயஸ் கார்டன் நுழைவு வாசலிலேயே பத்திரிக்கையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் அங்கு களேபரமானது.
இந்நிலையில் ரத்த வழி சொந்தமான தீபாவை உள்ளே அனுமதிப்பதில் என்ன பிரச்னை என்று தீபாவுடன் சென்ற 20 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தீபா போயஸ் கார்டன் சென்ற செய்தியை கேட்டு அங்கு அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர். இதே போன்று மாதவன் ஆதரவு கும்பல் போயஸ் நோக்கி படையெடுத்தனர். தீபா, மாதவன் தொண்டர்களைப் போலவே ஜெயலலிதா இல்லத்தை நினைவில்லமாக அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டியைச் சேர்ந்த ஆதரவாளர்களும் ஒன்றுகூடினர்.
இவர்களையெல்லாம் சமாளிப்பதற்காக முதல்வர் பழனிசாமி ஆதரவாளர்களும் போயஸ்கார்டனுக்கு படையெடுத்ததால் போயஸ்கார்டன் பகுதி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் காணப்பட்டது.
அதிமுகவில் நிலவும் பல்வேறு கோஷ்டி பிரச்னையால் கட்சி அலுவலகம் யாருக்கு என்று பஞ்சாயத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அமைதியாக இருந்த ஜெ.தீபா புயலாக சுழன்றடித்து காரியத்தில் இறங்கியதால் சன்டே போலீஸ்காரர்களுடன் சண்டையிடும் நாளாக மாறியது.