செக் மோசடி வழக்கில் மாஜி அமைச்சர் அன்பரசுக்கு 2 ஆண்டு சிறை உறுதி
செக் மோசடி வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மாஜி எம்.பி.க்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.க்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய சென்னை முன்னாள் எம்.பி அன்பரசுக்கு சென்னை நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அன்பரசு, இரண்டுமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
1980ஆம் ஆண்டு செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதியில் இருந்தும், 1989ஆம் ஆண்டு மத்திய சென்னை தொகுதியில் இருந்தும் அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2006ஆம் ஆண்டு சினிமா பைனான்சியர் முகுல் சந்த் போத்ராவிடம் இருந்து அன்பரசு ரூ.35 லட்சம் வாங்கி இருந்தார்.
ராஜீவ்காந்தி கல்வி அறக்கட்டளை வளர்ச்சிப் பணிக்காக இந்த பணம் பெறப்பட்டது. இந்த பணத்தை திருப்பி கொடுக்க அன்பரசு செக் வழங்கினார். ஆனால் ராஜீவ்காந்தி கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கி கணக்கில் பணம் இல்லாததால் செக் திரும்பியது.
இதையடுத்து அன்பரசு, அவர் மனைவி கமலா, தொழில் அதிபர் மணி, பரமசிவம், சண்முக செல்வி உள்பட 8 பேர் மீது முகுல்சந்த் போத்ரா செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். சென்னை ஜார்ஜ் டவுன் எட்டாம் எண் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 2007ஆம் ஆண்டு முதல் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 2015ஆம் ஆண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது.
செக் மோசடி செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் முன்னாள் எம்.பி. அன்பரசுக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை விதிப்பதாகவும், மேலும், அன்பரசு மனைவி கமலா, தொழில் அதிபர் மணி ஆகியோருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட 8 பேரில் பரமசிவம், சண்முக செல்வி உள்பட 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ரூ.35 லட்சத்தை திருப்பி கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் முன்னாள் எம்.பி. அன்பரசு, ராஜீவ் கல்வி அறக்கட்டளைக்காக வாங்கிய பணத்தை 9 சதவீத வட்டியுடன் 2006ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
அன்பரசனின் மேல்முறையீட்டை சென்னை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அன்பரசு மனைவி இறந்துவிட்டதால் அவரது தண்டனை கைவிடப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் அன்பரசுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.