அதிமுக கவுன்சிலர் கொலை: விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் 4 பேர் கைது
ராஜபாளையம்: ராஜபாளையம் அதிமுக கவுன்சிலர் மீனாட்சி சுந்தரம் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 4 பேரை விருதுநகர் மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜபாளையம் சூளை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பா.மீனாட்சிசுந்தரம் (40). ராஜபாளையம் 17-வது வார்டு அதிமுக கவுன்சிலர்.
இவர் தொடர்ந்து 3-வது முறையாக கவுன்சிலராக பதவிவகித்து வந்தார். எம்.ஜி.ஆர். இளைஞரணி நகரச் செயலராகவும் பதவி வகித்து வந்தார்.
பேரிச்சம்பழம் மொத்த வியாபாரம் தவிர ரியல் எஸ்டேட், பணம் கொடுக்கல் வாங்கல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
ராஜபாளையம் பஞ்சு மில் சாலையில் உள்ள தனது அலுவலகத்துக்கு வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். வழியில் மாயூரநாதர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு கடைக்குச் சென்ற வரை மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் வழிமறித்துப் பேசியுள்ளனர். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியுள்ளது.
அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் 2 பேர் அரிவாளால் சரமாரியாக மீனாட்சிசுந்தரத்தை வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இக்கொலை சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பானது. பொது மக்கள் அலறியடித்து ஓடினர். வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
நால்வர் கைது
அதிமுக கவுன்சிலர் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், சீனிவாசன், பி.நாதன், எம்.நீரதுலிங்கம் மற்றும் வி.ரமேஷ் ஆகியோரை இன்று கைது செய்தனர். இவர்கள் அனைவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
பார் நடத்துவதில் பிரச்சினை
டாஸ்மாக் மதுபான விடுதி பார் நடத்துவதையொட்டி மீனாட்சி சுந்தரத்திற்கும், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட இளைஞரணி துணைச் செயலர் சீனிவாசன் (37) என்பவருக்கும் மோதல் இருந்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பார் நடத்த அனுமதி மறுப்பு
திருவள்ளுவர் நகர் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான விடுதியை நடத்தி வந்தார் சீனிவாசன். ஆனால், சமீபத்தில் பார் நடத்தும் உரிமை கைமாறியதாக தெரிகிறது. இதனையடுத்து காட்டன் மார்க்கெட் அருகே டாஸ்மாக் கடை ஒன்றைத் திறந்து பார் வசதிக்கு அனுமதி அளிக்குமாறு கவுன்சிலர் மீனாட்சி சுந்தரத்திடம் சீனிவாசன் உதவி கேட்டதாகவும், ஆனால் மீனாட்சி சுந்தரம் உதவி செய்ய மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தலைமறைவான ஒருவர்
இந்தக் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட 3 ஆயுதங்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. கொலையில் தொடர்புடையதாகக் கருதப்படும் 5-வது நபர் தமிழ்வளவன் என்பவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.