மக்கள் நலக் கூட்டணியில் த.மா.கா நீடிக்குமா?: ஜி.கே.வாசன் சஸ்பென்ஸ் !
சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் நீடிப்பது தொடர்பாக ஜூன் 11-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க முடிவு செய்தது. இதை விரும்பாத மூத்த தலைவர்களான எஸ்.ஆர். பாலசுப்ரமணியம், பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்பி விஸ்வநாதன் போன்றவர்கள் கட்சியை விட்டு விலகினர்.
எஸ்.ஆர்.பி. அதிமுகவில் இணைந்தார். தற்போது ராஜ்யசபா எம்.பியாக உள்ளார். பீட்டர் திரும்பவும் காங்கிரஸுக்கே போய் விட்டார். தேர்தலில் தமாகா மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. எங்குமே டெபாசிட் கிடைக்கவில்லை. 26 இடங்களில் போட்டியிட்டு பெரும் தோல்வியே அதற்குப் பரிசாக கிடைத்தது. ஒரு சதவீத வாக்குகளைக் கூட அதனால் வாங்க முடியவில்லை.
இந்த நிலையில் தமாகா மாவட்டத் தலைவர்களின் கூட்டம் மயிலாப்பூர் சி.ஐ.டி காலனியில் உள்ள கவிக்கோ அரங்கத்த்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். தேர்தல் தோல்விக்கான காரணங்களை மாவட்டச் செயலாளர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் தமாகாவைப் பலப்படுத்த 100 சதவீத பணிகளை மேற்கொண்டு வருகிறோம். உள்ளாட்சி தேர்தல், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
சட்டசபைத் தேர்தலில் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறோம். வரும் காலகட்டங்களில் வெற்றி பெறுவதற்கான நல்ல சூழ்நிலைகளை ஏற்படுத்துவதற்காக நிர்வாகிகள் தொண்டர்களின் ஆலோசனைகளைக் கேட்டு வருகிறேன்.
ஜூன் 11-ஆம் தேதி கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது. மக்கள் நலக் கூட்டணியில் நீடிக்கலாமா, விலகலாமா என்பது தொடர்பாக செயற்குழுவுக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்றார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் உள்ளாட்சி தேர்தலிலும் தே.மு.தி.க.,-தா.மா.கா-மக்கள் நலக் கூட்டணி தொடரும் என அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.