2–வது நாளாக தொண்டர்களுடன் ஜி.கே.வாசன் ஆலோசனை - 12 அல்லது 16–ம் தேதி புதுக் கட்சி?
சென்னை: காங்கிரசிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்க இருப்பதாக நேற்று அறிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தனது புதிய கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னம் குறித்து தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை ஞானதேசிகன் ராஜினாமா செய்ததை அடுத்து, ஈ.வி.கே.எஸ்.இளக்கோவன் புதிய தலைவராக பதவியேற்றுள்ளார்.
கட்சித் தலைமை மீது அதிருப்தி அடைந்த ஜி.கே.வாசன், காங்கிரசில் இருந்து வெளியேறி புதிய கட்சி தொடங்க இருப்பதாக நேற்று அறிவித்தார்.
திருச்சி பொதுக்கூட்டம்...
மேலும், தனது புதிய கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடி குறித்த விவரங்களை திருச்சியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் அறிவிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
ஆலோசனைக் கூட்டம்...
இந்நிலையில், திருச்சியில் பொதுக்கூட்டம் நடக்கும் இடம், தேதி பற்றி கட்சி நிர்வாகிகளுடன் இன்று அவர் 2-வது நாளாக ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் ஆழ்வார்பேட்டை அசோகா தெருவில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
பங்கேற்பு...
இதில், ஞானதேசிகன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், பீட்டர் அல்போன்ஸ், ஜான் ஜேக்கப் எம்.எல்.ஏ, கோவை தங்கம், ஞானசேகரன், சாருபாலா தொண்டைமான் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஏராளமான தொண்டர்கள்...
ஜி.கே.வாசன் ஆதரவாளர்களான சைதை ரவி, இ.சி.சேகர், ஜி.ஆர்.வெங்கடேஷ், தாஸ் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ மகேஸ்வரி, என்.டி.எஸ். சார்லஸ், என்.எஸ்.விஜயக்குமார், தி.நகர் தோதண்டன், லயோலா லாசர் உள்பட ஏராளமான தொண்டர்களும் வாசன் அல்உவலகம் முன்பு திரண்டிருந்தனர்.
இரண்டில் ஒன்று...
கிடைத்துள்ள தகவல்களின் படி, திருச்சி பொதுக் கூட்டத்தை வரும் 12ம் தேதி அல்லது 16ம் தேதி நடத்த வாசன் தரப்பு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
தாமதம்...
புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது தொடர்பான நடைமுறைகளுக்கு காலதாமதம் ஆவதால், பொதுக் கூட்ட தேதியை முடிவு செய்வதில் குழப்பம் நீடிப்பதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி...
இன்றைய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வாசன் கூறியதாவது :-
நேற்று நடைபெற்ற புதிய கட்சி தொடக்க விழா கூட்டத்துக்கு வருகை புரிந்த மூத்த முன்னணி தலைவர்கள், தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் எதிர்பார்க்காத அளவிற்கு தொண்டர்கள் திரண்டனர். வரமுடியாத பலர் பல மாவட்டங்களில் இருந்து என்னிடம் டெலிபோனில் தொடர்பு கொண்டும் இன்று நேரில் வந்தும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அனைவரது எண்ணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் எங்கள் கட்சி செயல்படும்.
தேர்தல் ஆணைய நடைமுறைகள்...
புதிய கட்சியின் பெயர், கொடி, அறிவிப்பு தேதி குறித்து ஆலோசித்து வருகிறோம். தேர்தல் ஆணைய நடைமுறைகள் முடிவடைந்ததும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.
மகிழ்ச்சி...
பல்வேறு இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரசுக்கும் எங்களுக்கும் இடையே இருக்கும் கருத்து வேறுபாடு என்பது இலக்கை எப்படி அடைவது என்ற வழிமுறையில்தான் உள்ளது.
முரண்பாடு இருக்காது...
காங்கிரஸ் தொண்டர்களுடன் எங்கள் தொண்டர்கள் நண்பர்களாகவே இருப்பார்கள். எந்த முரண்பாடும் இருக்காது. அப்படி முரண்பாடு இருப்பதை விரும்புவதும் இல்லை.
வெற்றி இயக்கமாக்குவோம்...
காங்கிரசின் அகில இந்திய தலைமையை பற்றியோ, தலைவர்களை பற்றியோ யாரும் இழிவாக பேசக்கூடாது. அவ்வாறு பேசினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் குறைகூறி கட்சி வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த இயக்கம் முதல் நிலை இயக்கமாக வளர்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். வெற்றி இயக்கமாக வளர உழைப்போம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.