லோக்சபா தேர்தல்.. ஓரிரு நாட்களில் 'கூட்டணி' பற்றிய அறிவிப்பு வெளியாகலாம்: ஜி.கே. வாசன்
சென்னை:லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக ஓரிருநாட்களில் ஏதாவது அறிவிப்பு வெளியாகலாம் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்திபவனில் இன்று காங்கிரஸ் கட்சியின் மாநில தேர்தல் குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:
வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட ஆயிரத்துக்கும் அதிகமான காங்கிரஸார் மனு அளித்துள்ளனர். எதிர்பார்த்ததை விட அதிகமானேர் மனு அளித்துள்ளது காங்கிரஸின் பலத்தை காட்டுகிறது.
கூட்டணி தொடர்பாக நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு கட்சிகளுடன் பேசி வருகிறோம். அதில் ஏதாவது முடிவு ஏற்பட்டால் அந்தக் கட்சிகளின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டும்.
இன்னும் சில நாள்களில் கூட ஏதாவது அறிவிப்பு வெளியாகலாம். மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வரவில்லை. அதனால் அது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது.
இவ்வாறு வாசன் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், உங்கள் மீது (வாசன்) ஊழல் குற்றம் சாட்டியுள்ளாரே என்ற கேள்விக்கு, தேர்தல் ஆதாயத்துக்காகவும், விளம்பரத்துக்காகவும் அவர்கள் எல்லோர் மீதும் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். எனவே, அவர்களுக்கு விளம்பரம் கொடுக்க விரும்பவில்லை. அதற்காக நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார் வாசன்.