ஆந்திராவுக்கு ஓட்டமெடுக்கும் தொழிற்சாலைகள்...தமிழக அரசு மீது ஜி.கே.வாசன் கடும் தாக்கு!
தமிழக அரசின் ஆக்கப் பூர்வமில்லாத நடவடிக்கைகளால் ஆந்திர மாநிலத்திற்கு பல தொழிற்சாலைகள் படையெடுக்க தொடங்கிவிட்டன என்று கூறியுள்ளார் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமியின் அரசின் உருப்படியில்லாத நடவடிக்கைகளால்,தமிழகத்தில் இருந்து பல்வேறு தொழிற்சாலைகள் ஆந்திர மாநிலத்துக்குச் சென்றுவிட்டன என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்.
இது குறித்து ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவில் தொழிற்சாலைகள் தொடங்க ஏற்ற மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் இருந்தது. அதனால் தான் வெளிநாட்டினர் சென்னையில் கார் மற்றும் இருசக்கர வாகன தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், முதலீடு செய்வதற்கும் முன் வந்தார்கள்.
ஆனால் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உதவிகள், வசதிகள், சலுகைகள் ஆகியவற்றை தமிழக அரசு கொடுக்க தவறிவிட்டது. இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து அமையக்கூடிய நிறுவனங்களும் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சென்றிருக்கிறது. நமது மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வெளிமாநிலங்களுக்கு செல்வது அதிர்ச்சி அளிக்கிறது.
இதற்கெல்லாம் காரணம் தமிழக ஆட்சி, அதிகாரத்தில் ஏற்பட்ட குழப்பங்கள். அமைச்சர்களும், அதிகாரிகளும் சரியாக செயல்பட முடியாததால் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள், முடிவுகள் எடுக்கப்படவில்லை. தமிழக அரசு செயல்பட தவறிவிட்டது.
எனவே அமைச்சர்கள், அதிகாரிகள் மாநில வளர்ச்சி, முன்னேற்றத்தை கருதி கடமை உணர்வோடு, பொறுப்புடன் செயல்பட வேண்டும். இதைத்தான் இந்த அரசிடம் இருந்து பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாறு வாசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.