உண்மையான பிரச்சினைகளை மறைக்க விளம்பரத்தில் விளையாடும் திமுக- அதிமுக: ஜி.ராமகிருஷ்ணன்
சென்னை: தமிழக மக்களின் உண்மையான பிரச்சினைகளை திரையிட்டு மறைக்கவே திமுகவும், அதிமுகவும் மாற்றி, மாற்றி விளம்பரம் செய்து வருகின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த சில நாட்களாக அதிமுகவும், திமுகவும் செய்துவரும் விளம்பரங்கள் தமிழக மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளன.
ஆளுங்கட்சியை முன்னிலைப்படுத்தி அரசு செலவில் வழங்கப்படும் பத்திரிகை விளம்பரங்கள் ஒருபுறம் என்றால், அதிமுகவை விமர்சித்து பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் திமுகவினர் விளம்பரம் கொடுப்பது மறுபுறம் நடக்கிறது.
மறைக்கப்படும் மக்களின் பிரச்சினைகள்:
இத்தகைய விளம்பரங்களின் நோக்கம் திமுக மற்றும் அதிமுகவின் லாவணி அரசியலை பிரதானப் படுத்தி தமிழக மக்களின் உண்மையான பிரச்சனைகளை மறைப்பதேயாகும். இரண்டு கட்சிகளின் இத்தகைய கபடப் பிரச்சாரத்தின் பிடியில் மக்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது.
ஊழலோ ஊழல்:
திமுகவின் தவறுகளை சரி செய்வோம் என்று சூளுரைத்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு கொள்கைகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. விவசாய விளைபொருட்களுக்கு விலை இல்லை, சிறு குறுந்தொழில்கள் பாதிப்பு, பல அரசுப்பள்ளிகள் மூடல், வேலையின்மை அதிகரிப்பு என்பதுடன் அரசு நிர்வாகத்தின் அடிமுதல் நுனிவரை அனைத்திலும் ஊழல் என்ற சூழ்நிலையே தொடர்கிறது.
காற்றோடு போன வாக்குறுதிகள்:
89 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம், தனிநபர் வருமானத்தை 2 மடங்குக்கு மேல் உயர்த்துவோம், விவசாயிகளின் தனிநபர் வருமானத்தை 2 - 3 மடங்குக்கு மேல் உயர்த்துவோம் என்று 2011 தேர்தல் அறிக்கையில் அதிமுக அள்ளிவிட்ட வாக்குறுதிகள் காற்றோடு போய் விட்டன.
கிரானைட் கொள்ளை:
திமுகவோ அதிமுகவோ வாய் திறக்க மறுக்கும் கிரானைட் கொள்ளை பற்றிய அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தடைகளையும் தாண்டி மதுரை மாவட்ட கிரானைட் குவாரிகளில் ஆய்வு மேற்கொண்ட சகாயம் ஐ.ஏ.எஸ் அந்த மாவட்டத்தில் மட்டும் கடந்த 20 ஆண்டுகளில் கிட்டதட்ட ரூபாய் 1,60,000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதை தன் அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளார்.
எல்லோருக்கும் பங்குண்டு:
திமுகவோ, அதிமுகவோ இது பற்றி எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதே நடந்த ஊழலில் இருவருக்கும் பங்குண்டு என்ற உண்மையின் பிரதிபலிப்பு தானே. இந்த இரண்டு கட்சிகளும் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டால்தான் மக்கள் சொத்துக்களை மீட்க முடியும்.
மறைத்துவிட முடியாது:
பொதுச் சொத்துக்கள் கொள்ளை போக அனுமதித்து விட்டு, அதனை அவரவர் மேடைகளில் ஆடல்பாடல் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதிலும், விளம்பரங்களிலும் மறைத்துவிடலாம் என்றே இரண்டு கட்சிகளும் கருதுகின்றன. பல்லாயிரம் கோடி பணத்தை இதற்காக அவர்கள் தொடர்ந்து செலவிடுவார்கள் என்பது வெளிப்படை. தமிழக மக்கள் தேர்தல் மேடையில் அரங்கேற்றப்படும் இந்நாடகத்தை அடையாளம் கண்டு இந்த இரண்டு கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும்'' என்று பேசியுள்ளார்.