6 நாட்களாக அகற்றப்படாத குப்பை... நோய் தொற்றும் அபாயம்... அச்சத்தில் சென்னை மக்கள்
வர்தா புயல் கரையை கடந்து 5 நாட்கள் ஆகியும் சென்னை சாலைகளில் குப்பைகள் அகற்றப்படாததால் தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.
சென்னை: கடந்த திங்கள் கிழமை அதி தீவிர வர்தா புயல் சென்னை அருகே கரையை கடந்தது. அன்று முதல் இன்று வரை சென்னையில் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடக்கின்றன. இதனால் துர்நாற்றமெடுத்து நோய்கள் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த வர்தா புயல் சென்னை அருகே திங்கள் கிழமை கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது கன மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் சென்னை சின்னாபின்னமானது. மரங்கள் அடியோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் ஒடிந்து விழுந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
புயல் கரையைக் கடந்த திங்கள் கிழமை முதல் வெள்ளிக் கிழமை வரை முறிந்து விழுந்த மரங்கள் சென்னை முழுவதுமே எடுக்கப்படாமலேயே உள்ளன. குறிப்பாக ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஜாம்பஜார் உள்ளிட்டப் பகுதிகளில் மரக்கழிவுகள் எடுக்கப்படாமல் உள்ளன. மேலும், அன்றாடம் மக்களால் குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படும் குப்பையும் ஒரு வாரமாக அகற்றப்படாமல் உள்ளன.
தேங்கிக் கிடக்கும் குப்பை
வர்தா புயலால் சாலைகளில் மரம் விழுந்ததால் ஏற்பட்டுள்ள கழிவுகள் இன்னும் அகற்றப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க, குப்பைகளும் சாலைகளில் குவிந்துள்ளன. கிட்டத்தட்ட ஒரு வாரமாக குப்பை அகற்றப்படாமல் திருவல்லிக்கேணி பகுதியில், டாக்டர் நடேசன் சாலை, பிபி சாலை, ஈ டிப்போ தெரு ஆகிய சாலைகளில் குப்பை தேங்கிக் கிடக்கின்றன. மேலும், ராயப்பேட்டை பகுதியில் விஎம் தெரு, ஸ்ரீபுரம் சாலை, லாயிட்ஸ் சாலைகளில் குப்பை அகற்றப்படாமல் குப்பை தொட்டி நிறைந்து சாலைகளில் பரவிக் கிடக்கின்றன.
நோய்த் தொற்றும் அபாயம்
ஒரு வாரமாக குப்பை அகற்றப்படாமல் உள்ளதால் மிக மோசமான துர்நாற்றம் அந்தப் பகுதிகளில் வீசி வருகிறது. இதனால் கிருமிகள் உருவாகி நோய்கள் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடக்கும் காலம் இது என்பதால் மாணவர்களுக்கு காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
என்ன செய்து கொண்டிருக்கிறது மாநகராட்சி
இதுகுறித்து, ராயப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த அருண், "இங்கே சாலைகளில் விழுந்த மரங்களையே இன்னும் எடுக்கவில்லை. போன ஞாயிற்றுக் கிழமையில் இருந்து குப்பை அள்ளாமல் கிடப்பதால் நாற்றம் அடிக்கிறது. வேரொடு விழுந்த மரங்களைக் கூட நாங்கள்தான் அகற்றி ஓரமாக போட்டுள்ளோம். அன்றாடம் குப்பைத் தொட்டியில் கொட்டும் குப்பைகளையாவது மாநகராட்சி வந்து அள்ளிக் கூடாதா? இங்கே வீசும் நாற்றத்தால் குழந்தைகளை வைத்துக் கொண்டு இருக்கவே பயமாக இருக்கிறது. என்ன நோய் எப்போது வரும் என்று யாருக்குத் தெரியும்" என்று வேதனை தெரிவித்துள்ளார்.
டாக்டர்கள் எச்சரிக்கை
மழை, புயல் போன்ற நேரங்களில் பரவும் நோய்கள் எண்ணிலடங்காதவை, இதுதான் பரவும் என்று சொல்ல முடியாத அளவிற்கு நோய்கள் தொற்றும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்களும் அறிவுரைக் கூறி வருகின்றனர். எனவே, மாநகராட்சி விரைவாக மரக்கழிவுகள் மட்டுமன்றி அன்றாடம் மக்களால் போடப்படும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். பிளிச்சிங் பவுடர் தூவி அந்தப் பகுதியின் சுகாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.