கம்ப்யூட்டர் பதிவில் குளறுபடியாம்… மதிப்பெண் பட்டியலில் திருநங்கை எனப் பதிவு.. மாணவி அதிர்ச்சி
கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் ஏற்பட்ட குளறுபடியால், 10ம் வகுப்புத் தேர்வில் 450 மதிப்பெண்கள் எடுத்த சங்கிதா என்ற மாணவியின் பாலினம் திருநங்கை என பதிவாகியுள்ளது.
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வில் சங்கீதா 450 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் மதிப்பெண் பட்டியலில் இவர் மூன்றாம் பாலினம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் நெற்குந்தி கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் மகள் சங்கீதா. இவர் இன்று வெளியான 10ம் வகுப்பு தேர்வில் 450 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றுள்ளார்.
மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சியாக இருந்தாலும் மதிப்பெண் பட்டியலைப் பார்த்த சங்கீதாவிற்கு அதிர்ச்சி. மதிப்பெண் பட்டியலில் பெண் என்பதற்கு பதிலாக 3ம் பாலினத்தவர் என்று இருந்தது கண்டு ஆடிப்போயுள்ளார் சங்கீதா.
புகார்
பதறிப் போன மாணவி சங்கீதா பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார். இதுகுறித்து தலைமை ஆசிரியர் கல்வி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அவருடைய சான்றிதழில் திருத்தம் செய்து கொடுக்க கல்வி துறை ஏற்பாடு செய்துள்ளது.
திருநங்கையல்ல
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி, தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உள்ள ஒரு மாணவியின் பெயரை பதிவு செய்யும்போது தவறுதலாக 3-ம் பாலினத்தவர் என்று பதிவாகிவிட்டது. அவர் மாணவி தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.
பிழைத் திருத்தம்
வழக்கமாக மதிப்பெண் சான்றிதழ்களில் மாணவ - மாணவிகளின் பெயர், அவர்களது பெற்றோர்கள் பெயர் மற்றும் தலைப்பெழுத்து ஆகியவை தவறுதலாக இருக்கும். இதை மாற்றித் தருவோம் என்று கல்வி அதிகாரி தெரிவித்தார்.
கம்யூட்டர் குளறுபடி
இம்முறை, மாணவி சங்கீதாவின் பெயரை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பொழுது பெண் என்பதற்கு பதிலாக 3ம் பாலினம் என்று தவறாக பதிவாகி விட்டது. இந்த தவறை திருத்த கல்வித்துறை அவகாசம் தரும். மாணவிக்கு இந்த தவறை திருத்தி சான்றிதழ் வழங்குவோம் என்று கல்வி அதிகாரி ராமசாமி தெரிவித்தார்.