திருப்பூரில் மாணவி தற்கொலை: தலைமையாசிரியை சஸ்பென்ட், கணக்கு டீச்சர் டிஸ்மிஸ்!
திருப்பூர்: திருப்பூர், வீரபாண்டி அரசு பள்ளி மாணவி சுவாதி தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, அப்பள்ளியின் தலைமை ஆசிரியை தனலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பள்ளி கணக்கு ஆசிரியை பிரியா, பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் பழவஞ்சிபாளையம் வேலன் நகர் 2வது வீதியை சேர்ந்த மனோகரன் - சுசீலா தம்பதியின் மகள் சுவாதி (18), வீரபாண்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்2 கணினி அறிவியல் பாடப்பிரிவில் படித்து வந்தார்.
இந்நிலையில் புதன்கிழமையன்று மாணவி சுவாதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி வீரபாண்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சுவாதியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, சுவாதி தற்கொலை செய்வதற்கு முன், தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்று, அவருடைய நோட்டு புத்தகத்தில் இருந்தது. அந்த கடிதத்தில் தனது சாவுக்கு தலைமையாசிரியை மற்றும் கணக்கு ஆசிரியை தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். இருவரும் தன்னை திட்டி அவமானப்படுத்தியதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர், பள்ளிக்கு சென்று, தலைமையசிரியை தனலட்சுமி, கணக்கு ஆசிரியை பிரியா மற்றும் மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.
இதனிடையே அரசு மருத்துவமனைமுன்பு கூடிய மாணவியின் பெற்றோர்களும் உறவினர்களும், மகளின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களை கைது செய்யவேண்டும் என்று கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியை தனலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனால், கணக்கு ஆசிரியை பிரியா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை பள்ளி கல்வித்துறை எடுத்துள்ளது.