முதல்வர் கனவு…. வாசன் சொல்வது என்ன?
லட்சியத்தை அடையும் வரை போராடவேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பம். நானும் அதற்காக போராடுவேன் என்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே ஜி.கே.வாசனைச் சுற்றி ஊடகங்கள் மையம் கொண்டுள்ளன. காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வேறு கட்சி தொடங்கப் போகிறார் வாசன் என்று கடந்த பல மாதங்களாகவே ஊடகங்கள் ஊகமாக தகவல் வெளியிட்டாலும் மவுனம் மட்டுமே வாசனின் பதிலாக இருந்தது.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக 40 தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்த ஒரே தலைவர் வாசன்தான் என்றால் மிகையில்லை. தேர்தல் தோல்விக்குப் பின்னரும் எந்த வித ரியாக்சனும் இன்றி அமைதியாகவே இருந்தார் வாசன்.
ஆனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி காணவேண்டும் என்ற எண்ணம் நீருபூத்த நெருப்பாகவே வாசன் மனதில் கனன்று கொண்டிருந்தது.
செப்டம்பர் மாதம் சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்ற காமராஜர் சிலை, தீரர் சத்தியமூர்த்தி சிலைகள் திறப்பு விழாவில் இதற்கான அடித்தளமிடப்பட்டது என்றே கூறப்படுகிறது. காரணம் அந்த விழாவில் பங்கேற்றவர்களில் பெரும்பாலோனோர் வாசனின் ஆதரவாளர்கள்.
கடந்த 2 மாதகாலமாகவே தனிக்கட்சிக்காக பலவித ரகசிய கூட்டங்களை நடத்திய வாசன் கடைசியில் கடந்த திங்கட்கிழமை புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து விட்டார்.
தனியாக பிரிந்தாலும் காங்கிரஸ் கட்சியுடன் நட்பு நீடிக்கிறது என்றும், காங்கிரஸ் தலைமையை விமர்சிக்க கூடாது என்றும் வாசன் தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டிருப்பதுதான் அனைவரையும் சற்று யோசிக்க வைத்துள்ளது.
தன்னுடைய எண்ணம் என்ன? ஏன் தமிழ் மாநில காங்கிரஸ், தலைமையுடன் இணைந்தது. மீண்டும் இப்போது ஏன் பிரிந்தது?. முதல்வர் கனவு உண்டா என்பன போன்ற பல கேள்விகளுக்கு தனியார் தொலைக்காட்சியில் பதிலளித்துள்ளார் வாசன்.
திராவிட கட்சிகளுடன் கூட்டணியா?
தனிக்கட்சி தொடங்கினால் தனித்து இயங்கவேண்டும் என்பதில்லை. கூட்டணி சேராமல் யாரும் வெற்றி பெற முடியாது என்பது வாசனின் பதிலாக உள்ளது.
பாஜக திட்டத்தை முறியடிக்க
திராவிட கட்சிக்கு மாற்றாக தமிழகத்தில் பாஜக காலூன்ற நினைக்கிறது.அந்த திட்டத்தை முறியடிக்க காங்கிரஸ் கட்சியே உங்களை பின்னணியில் இயக்குவதாக தெரிவதாக சந்தேகம் எழுந்துள்ளதே? என்ற கேள்விக்கு பதிலளித்த வாசன், கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். யாரும் பலவீனப்படுத்த வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள் என்றார்.
ரஜினியின் ஒத்துழைப்பு
உங்களின் புதிய கட்சிக்கு ரஜினியின் ஆதரவு கிடைக்குமா என்ற கேள்விப்கு பதிலளித்த வாசன், நண்பர் ரஜினிகாந்த் மரியாதைக்கு உரிய தலைவர். அவரைப் போன்றவர்களின் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை என்றார்.
முதல்வர் கனவு
2016ல் ஆட்சியைப் பிடித்து முதல்வராகவேண்டும் என்பது எதிர்கட்சிகளின் கனவாக இருக்கிறது. உங்களுக்கும் முதல்வர் கனவு உண்டா என்ற கேள்விக்கு பதில் சொன்ன வாசன், எல்லோருக்கும் லட்சியத்தை அடையவேண்டும் என்பதுதான் கனவு. அதற்காகத்தான் போராடுகிறார்கள். எங்களுக்கு போகப் போக காலம்தான் பதில் கூறவேண்டும் என்றார்.
பொன்விழா காணும் வாசன்
காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து செயல்படுவதாக அறிவித்து விட்டாலும், கட்சி, கொடி என எதையும் அறிவிக்கவில்லை. திருச்சியில் அறிவிக்கப் போவதாக கூறியுள்ளார். வரும் டிசம்பர் 28ல் வாசனுக்கு 50 வயதாகிறது. பொன்விழா காணும் வாசன் தன்னுடைய கட்சியை, கொடியை அறிமுகப்படுத்துவதோடு முதல்வர் கனவை நோக்கி செயல்படுவார் என்றே அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.