கோயில் கட்ட ரூ.10 லட்சம் வசூலித்து மோசடி.. நெல்லை அருகே அருள் வாக்கு சாமியார் கைது!
நெல்லை அருகே கோயில் கட்டுவதாகக் கூறி பணம் வாங்கி மோசடி செய்த சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை : களக்காட்டில் கோயில் திருப்பணிக்காக பணம் வசூலித்து வந்த அருள்வாக்கு சாமியார் மோசடியில் ஈடுபட்டதால் போலீசார் அவரை கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரத்தில் சேதுராயபுரத்தை சேர்ந்தவர் அருள்ராஜ் என்பவர் சக்தி கோயில் அமைத்து அருள் வாக்கு சொல்லி வந்துள்ளார். இந்த கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

குமரி மாவட்டம் மேலகிருஷ்ணன் புதூரை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் தனது உறவினர்கள் மூலம் கோயில் பற்றி தெரிந்து கொண்டு அடிக்கடி கோயிலுக்கு வந்து அருள்ராஜிடம் அருள்வாக்கு கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதனால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அருள்ராஜிடம் கோயிலை விரிவுப்படுத்த இருப்பதாகவும் அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
மகாலிங்கமும் இதை நம்பி ரூ.10 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால் சொன்னப்படி அருள்ராஜ் கோயிலை விரிவப்படுத்தவில்லை. இதனால் மகாலிங்கம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அருள்ராஜ் பணத்தை திருப்பி தர மறுத்து விட்டார்.
மேலும் இனிமேல் பணத்தை திருப்பி கேட்டால் செய்வினை செய்து விடுவேன் என்றும் அருள்ராஜ் மிரட்டியுள்ளார். இதுகுறித்து மகாலிங்கம் களக்காடு போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் வழக்கு பதியாததால் மகாலிங்கம் நாங்குநேரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நீதிபதி சதீஷ் அளித்த உத்தரவின் பேரில் சாமியார் அருள்ராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications