காதல் விவகாரத்தில் தலித் இளைஞர் கோகுல்ராஜ் படுகொலை- 6 பேர் கைது!!
சேலம்: ஓமலூரைச் சேர்ந்த தலித் இளைஞர் கோகுல்ராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோகுல்ராஜை கொலை செய்ததாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் கடந்த 7 நாட்களுக்கு முன் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தார்.
கோகுல்ராஜும் நாமக்கல் மாவட்டம் பரமத்தியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். சம்பவ நாளில் கோகுல்ராஜும் அந்த பெண்ணும் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாதீஸ்வரர் கோவிலில் சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது ஒரு கார் வந்து நிற்க அதிலிருந்து இறங்கியவர்கள் கோகுல் ராஜை மட்டும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இந்த காட்சிகள் யாவும் அந்த கோவிலின் சிசி டிவியில் பதிவாகி இருந்தது.
கோகுல்ராஜ் கடத்தப்பட்ட தகவலை அந்த பெண், தம் நண்பர்களிடத்தில் கூறியதையடுத்து கோகுல்ராஜை அவர்கள் தேடினர். இந்நிலையில் தான் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.
இந்த பிரச்னையில் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக கூறி இதை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி அவரது சடலத்தை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் போராட்டம் நடத்தினர்.
நாமக்கல் பகுதியைச் சேர்ந்த ஜாதி அமைப்பை நடத்தி வரும் யுவராஜ் என்பவரது ஆட்கள்தான் கோகுல்ராஜை கடத்திச் சென்று கொலை செய்தனர் என்பதும் அவர்களது குற்றச்சாட்டு.
இதனிடையே கோகுல்ராஜ் இறப்பதற்கு முன் பேசி பதிவாகியுள்ளதாக கூறப்படும் வீடியோ ஒன்றும் வெளியானது. ஆனால் மிரட்டல் மற்றும் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் கோகுல்ராஜ் பேசுவதாக இருக்கிறது என்றும் அவரது உறவினர்கள் கூறினர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கோகுல்ராஜ் உடல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அதன் அறிக்கையை டி.எஸ்.பி.யிடம் மருத்துவமனை வழங்கியுள்ளது.
மருத்துவமனை அறிக்கையின் அடிப்படையில் கோகுல்ராஜ் மரணம் தற்போது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
6 பேர் கைது
இதனைத் தொடர்ந்து கோகுல்ராஜை கடத்தி படுகொலை செய்ததாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி யுவராஜை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கோகுல்ராஜின் உடலைப் பெற்றுக் கொண்ட அவரது உறவினர்கள் இன்று அடக்கம் செய்ய உள்ளனர்.