தென்மேற்குப் பருவமழை முடிந்தது… வடகிழக்குப் பருவமழை அடுத்தவாரம் தொடங்க வாய்ப்பு!
சென்னை: வடகிழக்குப் பருவமழை அடுத்தவாரம் தொடங்க வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். நடப்பாண்டு சென்னையில் 45 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடர்ந்து வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த வாரத்துடன் தென்மேற்கு பருவமழை முடிவடையும் காலமாகும்.
தமிழ்நாட்டுக்கு அதிக பயன் அளிக்கும் வடகிழக்கு பருவமழை அடுத்தவாரம் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினசரி மழை
தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால், இந்த வாரம் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யலாம். இதன் மூலம் தினமும் 1 மில்லி மீட்டர் முதல் 5 மில்லி மீட்டர் வரை மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்றும் மழை
சென்னையில் பகல்நேரங்களில் வெயிலடித்தாலும் இரவில் பரவலாக மழை பெய்கிறது. மயிலாப்பூர், தியாகராயநகர், மந்தைவெளி, அடையாறு உள்ளிட்ட சில இடங்களில் நேற்று மாலை லேசாக மழை பெய்துள்ளது.
கூடுதல் மழை
சென்னையில் ஜூன் 1-ந் தேதி முதல் இதுவரை 598 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. வழக்கமாக இந்த கால கட்டத்தில் 413 மி.மீ மழை பெய்யும். இந்த வருடம் 45 சதவீதம் அதிக மழை பெய்து இருக்கிறது.சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் அடுத்த சில தினங்களில் கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாடுமுழுவதும் மழை
இதனிடையே இந்த ஆண்டு நாடுமுழுவதும் பருவமழை நல்லமுறையில் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஜூன் 1 முதல் செப்டம்பர் 27 வரையிலான காலகட்டத்தில் 39 சதவிகிதம் கூடுதல் மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது.
நல்ல விளைச்சல்
கேரளா, கர்நாடகா, குஜராத்,மகாராஷ்டிரா, கிழக்கு ராஜஸ்தான், ஓடிஸா போன்ற மாநிலங்களில் பருவமழை சரியான காலத்தில் தொடங்கி கூடுதலாகவே பெய்துள்ளதால் பயிர்களின் விளைச்சலும் கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
வடகிழக்குப் பருவமழை
அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலமாகும். இன்னும் சில தினங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்க இருப்பதால், சென்னைக்கு மீண்டும் அதிக மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநகராட்சி தயாரா?
இரண்டுநாள் மழை பெய்தாலே சென்னை நகர சாலைகளும், பள்ளமான பகுதிகளும் வெள்ளநீரில் தத்தளிக்கின்றன. வடகிழக்குப் பருவமழையால் தினசரி மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதை சமாளிக்க மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதா என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.