சாமி கும்பிடச் சென்ற அரசு ஊழியர் வெட்டி கொலை... நெல்லை அருகே பதட்டம்... போலீஸ் குவிப்பு
நெல்லை: நெல்லை அருகே கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற அரசு ஊழியரை மர்ம கும்பல் வெட்டி கொன்ற சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.
நெல்லை அருகே சேரன்மகாதேவி கோட்டை தெருவை சேர்ந்தவர் செல்லையா. போலீஸ் நிலையம் எதிரே உள்ள பொது பணித்துறை கட்டுமான பிரிவில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவியும இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவரது குடும்ப கோயில் பொழிக்கரை சாலை பொதுபணிதுறை விருந்தினர் மாளிகை பின்புறம் உள்ளது.
இந்நிலையில் மாலை அலுவலக பணி முடிந்ததும் செல்லையா தனது மோட்டார் பைக்கில் கோயிலுக்கு சென்றார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு இரவு 8 மணி அளவில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது வயல் பகுதியில் மறைந்திருந்த மூன்று மர்மநபர்கள் திடீரென அவரை வழிமறித்து அரிவாளால் சராமரியாக வெட்டி விட்டு தப்பி விட்டனர்.
அந்த வழியாக சென்றவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை மீட்டு சேரன்மகாதேவியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
செல்லையா படுகொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது உறவினர்கள் கொலையாளியை கைது செய்ய கோரி சேரன்மகாதேவி பேருந்து நிலையம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெல்லை எஸ்பி விக்கிரமன், சப் கலெக்டர் விஷ்ணு தலைமையிலான அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கொலையாளியை கைது செய்வதாக எஸ்பி உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
ஆனபோதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.