தீவிரமடையும் அரசு ஊழியர்கள் போராட்டம்: சாலையில் சமையல் செய்து போராட்டம்
சென்னை: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நேற்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போரட்டக்காரர்கள் சாலை ஓரங்களிலும், முகாம்களிலும் சமையல் செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், காலி பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த 10ம் தேதி முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முடங்கிய அரசுப் பணிகள்:
சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் அலுவலகப் பணிகள் முற்றிலும் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.

போக்குவரத்து பாதிப்பு:
கடந்த 9 நாட்களாக தொடர்ந்து பணிகள் நடைபெறாததால் ஆவணங்கள் தேங்கியுள்ளன. இன்று 10-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. அரசு ஊழியர்களின் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

காத்திருப்பு போராட்டம்:
வாகனங்களில் செல்லக்கூடியவர்கள் போக்குவரத்து நெரிசலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால் அரசு ஊழியர்கள் தங்களது மறியல் போராட்டத்தை கைவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

சமையலும் அங்குதான்:
சென்னை, எழிலகத்தில், ஆயிரம் ஊழியர்கள் குவிந்தனர். அங்கேயே சமைத்து சாப்பிட்டு தங்களது போராட்டத்தை இரவிலும் தொடர்ந்தனர். அதேபோல் தமிழகம் முழுவதும், ஆட்சியர் அலுவலகங்களிலும், ஊழியர்கள் இதுபோன்று காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விரைவில் விடியல் வரும்:
நெல்லையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து, காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், இரவிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது கோரிக்கைகள் குறித்த அரசாணை விரைவில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதுவரையில் எங்களது காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications