அரசு ஊழியர்கள் தொடர் போராட்டம்: கோட்டையை முற்றுகையிட முடிவு - 30 ஆயிரம் பேர் கைது
சென்னை: 20 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி அரசு ஊழியர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்ற னர். 3-வது நாளான நேற்று தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 30 ஆயிரம் பேரை போலீஸார் கைது செய்தனர்.
முதல்வர் ஜெயலலிதா அரசு ஊழியர்களை சந்தித்து பேசவிட்டால் கோட்டையை முற்றுகையிடுவோம் என அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும்; சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை வரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும்; 2011இல் தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்; பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் கோரிக்கையாகும்.
அரசுத் துறையில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும்; குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ. 10 லட்சம் ஆக உயர்த்தவேண்டும்; அரசு ஊழியர் நடத்தை விதிகளை ரத்து செய்ய வேண்டும்; அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.
அரசு ஊழியர்கள் போராட்டம்
வேலை நிறுத்தப் போராட்டத்தில் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, சமூகநலம், ஊரக வளர்ச்சி, வணிகவரி, நெடுஞ்சாலைத் துறை, நிலஅளவைத் துறை, சுகாதாரப் போக்குவரத்துத் துறை மற்றும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையில் போராட்டம்
3வது நாளான நேற்று சென்னை எழும்பூர் அருகே கிரீம்ஸ் சாலை சந்திப்பில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் திரண்டு மறியல் போராட்டத்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கும் அதிகமாக போக்குவரத்து தடைப்பட்டது.
30 ஆயிரம் பேர் கைது
இதேபோல் தமிழகத்தில் நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். பிறகு, மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
நெல்லையில் போராட்டம்
அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக கோரிக்கையை வலியுறுத்தி, திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு சில பிரிவுகளில் அனைத்து ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றதால், அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
வருவாய்த் துறை அதிகாரிகள்
வருவாய்த் துறையில் பெருமளவில் பணியாளர்கள் பங்கேற்றதால் சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் அமைப்பாளர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் கலந்துகொண்டனர். ஏற்கெனவே தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வணிகவரித் துறை பணியாளர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். எனினும் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கின.
அரசு ஊழியர்கள் கொதிப்பு
போராட்டத்தில் பங்கேற்ற சமூக நல பணியாளர் சங்க மாநில பொது செயலாளர் துரைசிங் பேசியதாவது, அரசு ஊழியர்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர். தமிழக அரசு எங்களின் கோரிக்கைகளை ஏற்க மறுக்கிறது. கடந்த தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்குவோம், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வோம். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக படிகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்.
பேச்சுவார்த்தை தோல்வி
ஆனால் ஆட்சி முடியும் தருவாயிலும் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சென்னையில் 4 அமைச்சர்கள் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. முதல்வரை சந்திக்கவும் வழியில்லை. இதனால் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.
தலைமைச் செயலகம் முற்றுகை
திங்கள்கிழமை மீண்டும் போராட்டம் நடக்கும். பேச்சு வார்த்தைக்கு அழைக்காவிட்டால் சென்னைக்கு சென்று கோட்டையை முற்றுகையிடுவோம். எங்களது போராட்டத்திற்கு தலைமை செயலக ஊழியர்கள், அனைத்து துறை ஊழியர்கள் ஆதரவு அளிப்பாளர்கள் என்று காட்டமாக தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்களின் போராட்டம் காரணமாக பொதுமக்கள், சான்றிதழ்கள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.