போராட்ட களத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்... மீண்டும் நிர்வாகம் முடங்குமா?
போராட்டக் களத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் களமிறங்கியுள்ளதால் மீண்டும் அரசு நிர்வாகம் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்க மாநில அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்
சென்னை: தமிழக அளவில் மீண்டும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். இதனால் அரசு நிர்வாகம் மீண்டும் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 8வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்துவதற்கு முன்னர் 20 சதவீத இடைக்கால நிவாரணத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர், கடந்த ஜூலை மாதம் மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அரசுத்தரப்பில் கோரிக்கைகள் நிறைவேற்ற வாக்குறுதி அளிக்கபட்டது.
இதனையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் பல வாரங்கள் கடந்த நிலையில் கோரிக்கைகள் நிறைவேற்றும் நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்பதால் அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
சென்னை பேரணி
இதனையடுத்து அரசு ஊழியர்கள் மற்றும்ம் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் சென்னையில் நேற்று இரண்டாவது கட்டமாக பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டு அதன்படி, போராட்டம் தொடங்கியது. ஆனால், கோட்டை நோக்கி பேரணி செல்வதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
பல்லாயிரக்கணக்கானோர் பேர் பங்கேற்பு
மேலும் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்த ஜாக்டோ ஜியோவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பங்கேற்ற இந்த போராட்டம் அரசை அதிர வைத்துள்ளது.
ஆங்காங்கே தடுத்து நிறுத்தம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த ஆசிரியர்களின் பேருந்து வேலூர் அருகே தடுத்து நிறுத்தப்பட்டது. சென்னையில் நடைபெறும் ஜக்டோ -ஜியோ ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க செல்வதாகக் கூறியும் போலீசார் ஆசிரியர்களை அனுமதிக்கவில்லை.
அரசு ஊழியர்கள் கைது
இதனால் ஆத்திரமடைந்த 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வாலாஜா சுங்கச்சாவடி அருகே போராட்டம் நடத்தினர். இதே போன்று திருவள்ளூர் ரயில் நிலையத்திலும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
எதிர்விளைவுகள்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை இப்படியெல்லாம் நெருக்கடிக்கு ஆளாக்குவது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அச்சம் எழுந்துள்ளது. உரிய கோரிக்கைகளை உடனே நிறைவேற்றி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று ஜாக்டோ -ஜியோ தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.
உடனடி நடவடிக்கை
மீண்டும் அரசு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தினால், தமிழக அரசு நிர்வாகம் முடங்கும் என்பதால், பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. இதனால் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கினறனர்.