மாநில அரசுகள் மத்திய அரசின் ஏஜென்சிகளாகத்தான் இயங்குகின்றன: திருமாவளவன் விளாசல்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில சுயாட்சி மாநாடு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை தொடங்கி இரவு வரை நடைபெற்றது.
மத்தியில் உண்மையான கூட்டாட்சியை நிறுவவும், மாநிலங்களில் சுயாட்சி நிர்வாகத்தை உருவாக்கவும் ஜனநாயகத்தை பாதுகாக்கவும் அனைத்து ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.
கேரள முதல்வர் பிரணாய் விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
வன்முறை மாநிலம்
3000 இஸ்லாமியர்கள் கொன்று குவிக்கப்பட்டு, கர்ப்பிணி வயிற்றில் இருந்த சிசுவை வெளியே எடுத்து கொன்றவர்களை தொண்டர்களாக கொண்ட, குஜராத் மாநில முதல்வராக இருந்து நாட்டின் தலைவராக வந்தவர்தான் மோடி.
ஹிந்தி திணிப்பு
மாநில சுயாட்சியை வென்றெடுக்க நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகள் அனைவரும் அணிதிரள வேண்டும். கல்வி தொடர்பான அதிகாரங்களை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஆளுநர் பதவியை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பைக் கைவிட்டு தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்.
ஜனநாயகத்திற்கு எதிரானது
இந்தியாவில் பெரும்பான்மையான மாநிலங்களில் பாஜக ஆட்சி உள்ளது. குறிப்பிட்ட 10 மாநிலங்களில் பாஜக காலூன்ற முடியவில்லை. ஆனால் அவர்கள் நோக்கம், இந்தியா முழுவதிலுமுள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பாஜக ஆள வேண்டும் என்பது. எனவேதான், ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே கல்வி, ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்ற முழக்கங்களை முன்வைக்கிறார்கள். இது ஜனநாயகத்திற்கும், இந்திய பன்முகத்தன்மைக்கும் எதிரானது.
அம்பேத்கர் கருத்து
மாநிலங்கள் வலிமை குறைந்ததாக இருக்க கூடாது என்பதை அம்பேத்கர் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு மொழி, கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும் என அம்பேத்கர் கொள்கை கொண்டிருந்தார். அந்த கருத்துக்கு செயல்வடிவம் கொடுத்த பெருமை திமுகவை சேரும். மத்திய-மாநில அரசுகள் இடையேயான உறவை ஆய்வு செய்ய ஒரு கமிட்டியை நியமித்த இந்தியாவின் ஒரே தலைவர் கருணாநிதிதான்.
சர்வாதிகாரமாக கூடாது
கமிட்டி பரிந்துரை அடிப்படையில் மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிங்களவர்களை எதிர்க்கும் நாம்தான் அவர்களிடமே, தமிழீழம் கேட்கிறோம். அதேபோல இப்போது மத்திய அரசின் அதிகாரக் குவிப்பை எதிர்க்கிறோம். அவர்களிடமே அப்படி செய்ய கூடாது என வலியுறுத்துகிறோம். அதிகாரம் குவிந்தால் அது சர்வாதிகாரமாக மாறும். அதிகாரம் பகிரப்பட வேண்டும். இதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதனால்தான் மாநில சுயாட்சி கோரிக்கையை முன்வைக்கிறோம்.
மாநில வலிமை அவசியம்
இந்தியாவை வலிமைமிக்க நாடாக மாற்ற வேண்டும் என்று மோடி கூறுகிறார். அவ்வாறு வலிமையாக இருக்க மாநில அரசுகள் வலிமையாக இருக்க வேண்டும். அவர்கள் விரும்புவது இந்துத்துவ இந்தியா, நாம் விரும்புவது சமத்துவ இந்தியா. அவர்கள் ஒற்றையாட்சியை நிறுவ பார்க்கிறார்கள், நாம் கூட்டாட்சியை எதிர்பார்க்கிறோம். இந்தியாவின் பல மாநிலங்களிலும் அரசு என்று ஒன்று உள்ளதே தவிர அவை மத்திய அரசின் ஏஜென்சிகளாகத்தான் இயங்குகின்றன. அவர்கள் சொல்வதை இவர்கள் செய்கிறார்கள். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.