இடம் மாறுகிறது... இரு உயிர்கள் பறி போக காரணமாக இருந்த பட்டினப்பாக்கம் டாஸ்மாக் மதுக் கடை!
சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் உள்ள சர்ச்சைக்குரிய டாஸ்மாக் மதுக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஐந்து நாட்களாக நடந்து வந்த மக்கள் போராட்டம் எதிரொலியாக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
வேறு இடத்திற்குக் கொண்டு போய் அந்தக் கடையைத் திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனராம். சீனிவாசபுரத்தில் உள்ள இந்த மதுக் கடையில் மது அருந்தி விட்டுத்தான் கருணாகரன் என்ற கொள்ளையன், ஆசிரியை நந்தினியின் பணம் அடங்கிய கைப்பையை திருடிக் கொண்டு தப்பி ஓட முயன்றார். ஆனால் ஆசிரியை நந்தினி தனது மொபெட்டில் அவரைத் துரத்தவே, கருணாகரன், நந்தினியின் மொபட்டை காலால் உதைத்து விட்டார். இதில் வண்டி தாறுமாறாக போய் விழுந்து நந்தினியும், சாகர் என்பவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் கருணாகரனை மடக்கப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர். கருணாகரன் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மதுக் கடையை மூடக் கோரி கடந்த 5 நாட்களாக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
மதுக் கடையை இங்கிருந்து அகற்ற வேண்டும் என்று கூறி போராட்டம் நடந்து வந்தது. ஆனால் அரசுத் தரப்பில் கடையை மூடுவது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் தற்போது கடையை இடம் மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனராம். இந்தக் கடையை மூடி விடுமாறு போலீஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதால், அத ஏற்று கடையை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனறாம்.












Click it and Unblock the Notifications