கரூரில் ஹோட்டல் லைசன்ஸ் கொடுக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சுகாதார ஆய்வாளர் கைது
கரூர்: கருரில் உணவக உரிமம் அளிக்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சுகாதார ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.
கரூர் அருகே உள்ள தாந்தோன்றிமலை சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவர் அப்பகுதியில் உணவகம் நடத்த முடிவு செய்தார். தனது உணவகத்திற்கு உரிமம் பெறுவதற்காக தான்தோன்றிமலை கிளை நகராட்சியில் உள்ள சுகாதார ஆய்வாளர் செல்வராஜிடம் ஆவணங்களை கொடுத்துள்ளார். அதற்கு செல்வராஜ் ரூ. 3 ஆயிரம் பணம் கொடுத்தால் உரிமத்தை பெற்றுக் கொள்ளாம் என தெரிவித்துள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ரமேஷ் குமார் திருச்சி லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து திருச்சி லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் உலகநாதன் மற்றும் ஆய்வாளர் பிரசன்னா தலைமையிலான குழு செல்வராஜின் அலுவலகத்திற்கு வந்து மறைந்திருந்தது.
அங்கு வந்த ரமேஷ் குமார் சுகாதார ஆய்வாளர் செல்வராஜிடம் லஞ்சப் பணத்தை கொடுக்கும் போது அவரை லஞ்ச ஒழிப்புக்குழுவினர் கையும், களவுமாக பிடித்தனர். கைது செய்யப்பட்ட செல்வராஜ் திருச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.