மீன்பிடிக்கப் போய் முதலை வாயில் மாட்டிய பரிதாப விவசாயி உடல் மீட்பு
தண்டராம்பட்டு: சாத்தனூரில் மீன்பிடித்த போது முதலை இழுத்து சென்ற விவசாயி உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.
இந்த உடல் கிட்டத்தட்ட அவர் மீன்பிடித்த பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் தள்ளி கிடைத்தது.
சாத்தனூர் அருகே உள்ள வேடங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் இவர் ஒரு விவசாயி. இவர் சாத்தனூர் அணைக்கு தண்ணீர் வரும் பெரியமலை ஓடைப் பகுதியில் கடந்த 5 ஆம் தேதி மதியம் மீன்பிடித்து கொண்டிருந்தார்.
இழுத்துச் சென்ற முதலை:
அப்போது அணைக்கட்டில் வந்த முதலை இழுத்து சென்றது.பதறிப்போன அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடிய வில்லை. அதைத்தொடர்ந்து சாத்தனூர் போலீஸ் மற்றும் தண்டராம்பட்டு தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தேடும் பணி:
உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று படகு மற்றும் பரிசல் மூலம் ராதாகிருஷ்ணனை தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலை 6 மணி வரை உடல் கிடைக்காததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
உடல் கிடைக்கவில்லை:
நேற்று முன்தினம் இரண்டாவது நாளாக மீண்டும் படகு மற்றும் பரிசலில் சென்று மீனவர்கள் உதவியுடன் வலைவீசி தேடியும் ராதா கிருஷ்ணனின் உடல் கிடைக்கவில்லை.
ஒரு கிலோமீட்டர் தாண்டி உடல்:
இந்த நிலையில் 3 ஆவது நாளான நேற்று ராதாகிருஷ்ணனை முதலை இழுத்து சென்ற இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் லம்பாடி முரம்பு என்ற இடத்தில் ஒரு உடல் கிடப்பதாக சாத்தனூர் அணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கடித்து கொன்ற முதலை:
உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது அது முதலை இழுத்து சென்ற ராதாகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. அவருடைய உடலில் 2 இடங்களில் முதலை கடித்ததற்கான அடையாளங்கள் இருந்தன.
விசாரணை நடத்தும் போலீஸ்:
அவருடைய உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.