ஆன்மீக நம்பிக்கை குறைந்ததால்தான் தீக்குளிப்பு- பெரியார் ஈவேராதான் காரணம்... எச். ராஜா ‘உளறல்’
ஆன்மீக நம்பிக்கை குறைந்ததால்தான் தமிழகத்தில் தீக்குளிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
சென்னை: தமிழகத்தில் ஆன்மீக நம்பிக்கை குறைந்ததால்தான் தீக்குளிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன; பெரியார், அவரது ஆதரவாளர்கள் தமிழகத்தை குட்டிச்சுவராக்கியிருப்பதற்கு தீக்குளிப்பு சம்பவம் ஒரு சாட்சி என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமையால் பிஞ்சு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்தனர். இதில் தாய் மற்றும் 2 குழந்தைகள் மாண்டு போயினர்.
தமிழகத்தையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது இந்த கந்து வட்டி கொடுமை தீக்குளிப்பு. இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா கூறியுள்ளதாவது:
பகுத்தறிவால் ஏற்பட்ட விளைவு
தமிழகத்தில் ஆன்மீக நம்பிக்கை குறைந்ததால்தான் தீக்குளிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன. பகுத்தறிவு என கூறியே அடிப்படை அறிவையே மழுங்கடித்துவிட்டனர்.
ஆன்மீக நம்பிக்கை தேவை
ஆன்மீக நம்பிக்கை இருந்தால்தான் கஷ்டங்களை எதிர்கொள்கிற துணிச்சல் வரும். அதாவது இது ஆண்டவன் கொடுத்தது..நல்லது செய்வான் என்கிற நம்பிக்கை வேண்டும்.
நாத்திகத்தை விரட்டனும்
பெரியாரும் அவரது ஆதரவாளர்களும் நாட்டை குட்டிச்சுவராக்கியிருப்பதற்கு சாட்சிதான் தீக்குளிப்பு சம்பவம். நாத்திகத்தை விரட்டி அடித்தால் தீக்குளிப்பு சம்பவங்கள் நடைபெறாது.
தேசிய கட்சிகளில் இல்லை
திமுகவில் இருந்து வைகோ வெளியேறிய போது நிறைய பேர் தீக்குளித்தனர். ஆனால் தேசிய கட்சிகளில் தீக்குளிக்கும் நிகழ்வுகள் நடப்பது இல்லை.
இவ்வாறு எச். ராஜா கூறினார்.