எச்.ராஜா வாயை அடக்காவிட்டால் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டியது நிலை வரும்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
எச்.ராஜா வாயை அடக்கிப்பேசாவிட்டால் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டியது இருக்கும் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குறிப்பிட்டு உள்ளார்.
சென்னை : தொடர்ந்து தமிழகத் தலைவர்களை அவதூறாகப் பேசி வரும் எச்.ராஜா வாயை அடக்கி பேசாவிட்டால், விரைவில் அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டியது இருக்கும் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குறிப்பிட்டு உள்ளார்.
சென்னை கிழக்கு தாம்பரம் பாரத மாதா சாலை சந்திப்பில் புதிதாக நிறுவப்பட்டுள்ள காமராஜர் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக பல்வேறு கட்சிகள், மாணவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். போராடுபவர்களுக்கு செவி சாய்க்காமல் கண் துடைப்புக்காக சிறிதளவு கட்டணம் மட்டுமே குறைக்கப்பட்டு உள்ளது. இதில் உடனடியாக தமிழக அரசு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்து அடித்து இருக்கிறார்கள். போலீஸாரின் இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் அரசியல் நாகரீகம் மிகவும் மோசமடைந்து உள்ளது. பாஜகவின் எச்.ராஜா தொடர்ந்து தமிழகத் தலைவர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இனியும் எச்.ராஜா வாயை அடக்கிப் பேசாவிட்டால், அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications