சென்னை வெள்ளபெருக்கிற்கு காரணம் நேமம் ஏரி மணல்கொள்ளை?- ஹைகோர்ட் தாமாக முன்வந்து வழக்கு பதிவு
சென்னை: சென்னை பெருமழையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டத்தற்கு காரணம் நேமம் ஏரியில் சட்டவிரோதமாக மணல் சுரண்டப்பட்டதே காரணமா என்று ஹைகோர்ட் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த சி.எம்.துரை ஆனந்த் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நேமம் ஏரியில் தண்ணீர் நிரம்பிவிட்டால் கிருஷ்ணா நதிநீர் கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறந்துவிடப்படும். முதல்வர் வெளியிட்ட அறிவிப்பின்படி 2011 ஆம் ஆண்டு நேமம் ஏரியை ரூபாய் 79.50 கோடி செலவில் தூர்வார அரசாரணை பிறப்பிக்கப்பட்டது. ஏரியின் கொள்ளளவை 257 மில்லியன் கன அடியில் இருந்து 577 மில்லியன் கன அடியாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டது.
இதன்படி நேமம் ஏரியில் 2.45 மீட்டர் ஆழத்துக்கு 20,286 லாரி லோடு மணல் அள்ளவேண்டும். ஆனால் விதிமுறைகளுக்கு எதிராக 10 மீட்டர் ஆழம் வரை கிட்டதட்ட 7 லட்சம் லாரி லோடுகள் சவ்வூடு மணல் அள்ளப்பட்டுள்ளது. இதில் ஏரியின் கரை பலவீனமானது.
நவம்பர் மாதம் பெய்த கனமழையினால் இந்த ஏரி நிரம்பி கரை உடைந்ததால் தண்ணீர் முழுவதும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்றது. செம்பரம்பாக்கம் ஏரி கொள்ளளவை தாண்டியதால் டிசம்பர் 1 ஆம் தேதி இரவு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் சென்னை மாநகரில் வெள்ளம் புகுந்து பெருத்த சேதம் ஏற்பட்டது.
நேமம் ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டது குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இதுகுறித்து விசாரணை ஆணையத்தை அமைக்கும்படி தலைமை செயலாளருக்கு உத்தரவிடவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். இதுகுறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "வழக்கு ஆவணங்களை பார்க்கும்போது இதில் மனுதாரருக்கு பொதுநலன் இருப்பதாக தெரியவில்லை.
நேமம் ஏரி குறித்து மனுதாரர் அரசுக்கு எந்த புகார் மனுவையும் அனுப்பவில்லை. அவரது நண்பர் அனுப்பியதாக கூறியுள்ளார். இவருக்கு சென்னை மாநகரில் வெள்ளம் புகுந்ததற்கான காரணங்கள் குறித்து போதிய விவரங்கள் தெரியவில்லை. எனவே, அவரது மனுவை நிராகரிக்கிறோம்.
அதேநேரம், இந்த வழக்கில் அவர் எழுப்பியுள்ள காரணங்கள் முக்கியமானவை. ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்த வழக்கு ஹைகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே, இதன் அடிப்படையில் நேமம் குறித்து நாங்கள் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்கிறோம். இந்த வழக்கிற்கு தமிழக தலைமை செயலாளர் உள்ளிட்டோர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை ஏப்ரல் 13 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்" என்று தெரிவித்தனர்.