மீட்டர் பொருத்தாத ஆட்டோக்களை பறிக்கும் அரசாணை: அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: மீட்டர் பொருத்தாத ஆட்டோக்களை பறிமுதல் செய்யக்கோரும் அரசாணைக்கெதிரான வழக்கில் வரும் அக்டோபர் மாதம் 7ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீட்டர் பொருத்துவதற்கு அவகாசம் கேட்டு சென்னை ஆட்டோ ஓட்டுனர் சங்கம் தொடந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஆட்டோ கட்டணத்தை வரைமுறைப்படுத்த கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ந்தேதி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதன்படி 1.8 கி.மீ.க்கு ரூ.25 ஆகவும், அடுத்த ஒவ்வொரு கி.மீட்டருக்கும் ரூ.12 ஆகவும் ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
72000 ஆட்டோக்கள்
திருத்தப்பட்ட புதிய கட்டணங்கள் அடங்கிய அட்டை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் மொத்தம் 72 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இதில் 52 ஆயிரம் ஆட்டோ டிரைவர்கள் புதிய கட்டண அட்டையை வாங்கியுள்ளனர்.
புதிய மீட்டர்கள்
சென்னையில் பெரும்பாலான ஆட்டோக்கள் மீட்டர் இல்லாமலேயே ஓட்டப்பட்டு வந்தன. அது போன்ற ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
செப்டம்பர் 16ம் தேதி முதல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர். விதிமுறைகளை மீறி ஓடும் ஆட்டோக்களை பறிமுதல் செய்கின்றனர்.
கட்டண அட்டை
அக்டோபர் 15-ந்தேதிக்குள் புதிய கட்டணத்தை பொறுத்த வேண்டும் என்று அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டண அட்டையை ஆட்டோ உரிமையாளர்கள் வாங்கி செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 57,959 பேர் கட்டண அட்டையை பெற்று சென்றுள்ளனர்.
திருத்திய மீட்டர்
திருத்திய புதிய கட்டணம் மீட்டர் 13,333 ஆட்டோக்களில் பொறுத்தப்பட்டுள்ளது. 30 ஆயிரம் மீட்டர்களில் மெக்கானிக் கடைகளில் கட்டணம் திருத்தம் செய்யப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இதில் 13,333 பேர் மட்டுமே வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று முறையான அனுமதியை பெற்று சென்றுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
அதிரடி ஆய்வு
கடந்த 2 வாரமாக சென்னையில் பல்வேறு இடங்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், ஆய்வாளர்கள் நடத்திய அதிரடி சோதனையில் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆட்டோ டிரைவர்கள் பலர் சிக்கி இருக்கிறார்கள்.
1500 ஆட்டோக்கள் பறிமுதல்
இதுவரை 1500 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தகுதிச்சான்று, ஆர்.சி.புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாத ஆட்டோ உரிமையாளர்களிடம் குறைகளை சரி செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிக கட்டணம்
இந்த நிலையில் சென்னையில் ஒரு சில இடங்களில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய பகுதியிலும் அதிக ஆட்டோ கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரினை அடுத்து இதையடுத்து சிறப்பு பறக்கும் படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வட்டார போக்குவரத்து அதிகாரி தலைமையில் 6 ஆய்வாளர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர்.
புறநகரில் சோதனை
தாம்பரம், வேளச்சேரி, குரோம்பேட்டை, சேலையூர் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள பஸ், ரெயில் நிலையங்களில் ஆட்டோ டிரைவர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. அந்த இடங்களுக்கு பறக்கும் படையினர் ரகசியமாக சென்று கண்காணிக்கிறார்கள்.
நீதிமன்றம் நோட்டீஸ்
இதனிடையே மீட்டர் பொருத்தாத ஆட்டோக்களை பறிமுதல் செய்யக்கோரும் அரசாணைக்கெதிரான வழக்கில் வரும் அக்டோபர் மாதம் 7ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.