தலித் நல நிதியை வேறு திட்டங்களுக்கு எப்படி மாற்றலாம்.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: மத்திய அரசு ஒதுக்கிய ஆதிதிராவிடர்களுக்கான நல நிதியை மற்ற திட்டங்களுக்கு பயன்படுத்தியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆதிதிராவிடர்களின் நலனுக்காக மத்திய அரசு வழங்கும் 20 சதவீத தொகையை, தமிழக அரசு வேறு துறைகளுக்கு பிரித்து அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக பாஜகவின் எஸ்சி மோர்ச்சா பிரிவின் மாநில பொதுச்செயலாளர் எம்.செல்வராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், ‘மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கும் மொத்த ஒதுக்கீட்டில் 20 சதவீதம் தொகையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கு பயன்படுத்த அனுப்பி வைக்கிறது. ஆனால், மாநில ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் அந்த தொகையை மாநில அரசின் பல்வேறு துறைகளுக்கு பிரித்து அனுப்பியுள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் எனக்கு இது தெரியவந்தது.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கும் புகார் கடிதம் அனுப்பினேன். அதன்பேரில் இதுபற்றி விசாரிக்க தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
அந்த விசாரணையில் இந்த 20 சதவீதம் தொகை ஆதிதிராவிடர் நலனுக்கு பயன்படுத்தப்படாமல் மற்ற துறைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த விவரங்களை இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், மற்ற துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தொகையை வசூலித்து ஆதிதிராவிடர் நலனுக்கு பயன்படுத்தவும் உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், நீதிபதி ஆர்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுகுறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணை வரும் மார்ச் 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.