பழனி முருகன் கோவிலில் சர்ச்சை வேண்டாம்.. இந்து அல்லாதோர் நுழையத்தடை.. அறிவிப்பை வைக்க நீதிபதி ஆணை
பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை தண்டாயுதபாணி கோயிலில் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு பலகையை அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தேவையற்ற சர்ச்சை வேண்டாம் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது பழனி மலை. தரையிலிருந்து சுமார் 960 அடி உயரத்திலிருக்கும் இந்த மலையின் உச்சியில் முருகன் தண்டாயுதபாணியாக எழுந்தருளியுள்ளார்.
இங்குள்ள சிலையை போகர் எனும் சித்தர் உருவாக்கியதாகவும், இக்கோயில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகவும் சொல்லப்படுகிறது. பழனி மலையில் உள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உள்ள முருகப்பெருமானின் சன்னதி இயற்கை அதிசயங்களில் ஒன்று. கோவிலில் வழங்கப்படும் அபிஷேக பால் மற்றும் பஞ்சாமிர்தத்தை சாப்பிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களின் நோய்கள் நீங்கியுள்ளதாக ஹைகோர்ட் நீதிபதிகள் ஏற்கனவே ஒரு வழக்கில் குறிப்பிட்டுள்ளனர்.

பல்வேறு சிறப்புகள் கொண்ட பழனி முருகன் ஆலயத்தில், ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் என மூன்று விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் வெளி மாநிலங்கள் மட்டுமல்லாது, வெளி நாடுகளிலிருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேற்று மதத்தை சேர்ந்த இருவர் கோயிலுக்குள் வின்ச் ரயில் மூலம் நுழைய முயன்றுள்ளனர். பழனி பேருந்துநிலையம் அருகே பழக்கடை நடத்திவரும் சாகுல் என்பவர் சென்னையில் இருந்து வந்த தனது உறவினர்கள் சிலரை பழனி மலைக்கோவிலுக்கு அழைத்து செல்வதற்காக அடிவாரத்தில் உள்ள மின்இழுவை ரயில் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது டிக்கெட் கவுண்டர் அருகே சென்றபோது மாற்றுமதத்தினர் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பழனியை சேர்ந்த பழக்கடை உரிமையாளர் சாகுல் அதிகாரிகளுடனும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து இந்துமுன்னனி மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மின்இழுவை ரயில் நிலையத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகளுக்கு ஆதரவாக பேசி மலைக்கோவிலுக்கு செல்ல முடியாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த அடிவாரம் காவல் துறையினர் இந்து அமைப்பினரை சமாதானம் செய்தனர். மேலும் மலைக்கோவிலுக்கு செல்ல வந்த மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களை கோவிலுக்கு செல்ல முடியாது என்று தெரிவித்தனர்.
பழனி மலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கு முன் வரை இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கபடும் என்ற பதாகை இருந்த நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக அந்தப் பலகைகள் அனைத்தும் அகற்றப்பட்டது. இந்த நிலையில் இந்த பிரச்சினை காரணமாக மீண்டும் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் மாற்று மதத்தினர் யாரும் உள்ளே வரக்கூடாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அறிவிப்பு பலகை அங்கிருந்து அகற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, பழனி முருகன் கோயில் இந்துக்களின் வழிபாட்டு தலமாகும். இது ஒன்றும் சுற்றுலா தலம் அல்ல என்று குறிப்பிட்டிருந்தார். உடனே அறநிலையத்துறை இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் பிரவேசிக்க அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகையைவைத்து, பின் மிரட்டலுக்கு பயந்து அகற்றியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டிருந்தார்.
இது போன்ற அறிவிப்பு பலகை எல்லா கோவில்களிலும் வழக்கமான ஒன்றுதான். பழனியை போர்க்களமாக்க முயற்சிக்கும் சேகர் பாபுவின் இத்திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என்றும் எச். ராஜா கூறியிருந்தார். இதனிடையே, இந்துக்கள் அல்லாதோர் நுழையத்தடை என்ற அறிவிப்பு பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இந்துக்கள் அல்லாதோர் நுழையத்தடை என்ற அறிவிப்பு பலகையை அகற்றியது ஏன் என்று ஹைகோர்ட் கிளை நீதிபதி கேள்வி எழுப்பினார். உடனடியாக அறிவிப்பு பலகையை அதே இடத்தில் வைக்கவும் உத்தரவிட்டார். பழனி முருகன் கோவிலில் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம் என்று கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications