ஊழலின் ஊற்றுக் கண் நீங்கதான்.. ஸ்டாலின் மீது பாயும் அமைச்சர் விஜயபாஸ்கர்!
தான் நிரபராதி என்பதை நிரூபிக்கும் நாள் தொலைவில் இல்லை என்று தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை : தன் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்பூர்வமான சந்தித்து நிரபராதி என்பதை நிரூபிப்பேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
குட்கா முதல் குவாரி வரை பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று 3 பக்க தன்நிலை விளக்க அறிக்கையை அளித்துள்ளார். அதில், கூறியுள்ளதாவது:
புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசலில் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடமானது கழகம் எதிர்க்கட்சியாக இருக்கும் போது நான் குறிப்பாக சட்டசபை உறுப்பினர் உள்ளிட்ட எந்த அரசுப் பதவியிலும் இல்லாத போது 2007ம் ஆண்டு தொழில் துவங்குவதற்காக வாங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் பிரதானமான தொழில் கல்குவாரி, இது சாதாரணமாக சாலை போடுவதற்கு கட்டிடங்கள் கட்டுவதற்கும் தேவையான ஜல்லிப்பல் உற்பத்தி செய்யும் கிரஷர் தொழிலாசும். இந்தத் தொழில் 2007ம் ஆண்டு என் பெயரில் துவங்கப்பட்டது. இது சட்ட விதிகளுக்கு உட்பட்டு கனிம வள, சுற்றுச் சூழல், மாவட்ட நிர்வானம் என அனைத்து துறைகளின் முறையான அனுமதி பெறப்பட்டு இயங்கி வருகிறது. இதை போலவே 120 புளுமெட்டல் நிறுவனங்கள் புதுக்கோட்டை முழுவதும் இயங்கி வருகின்றன. இதில் எங்கள் குடும்பத்தின் நிறுவனமும் ஒன்று. இதில்உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு முறையான விற்கனை வரி, வருமான வரி உள்ளிட்டவைகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
நான் அமைச்சராகப் பொறுப்பேற்ற உடன் இந்த குடும்ப நிறுவனங்கள் என் பெயரில் இயங்கக் கூடாது என்பதற்காக வங்கி வரவு, செலவு உள்ளிட்ட முழு நிர்வாகப் பொறுப்பையும் எனது தந்தைபெயருக்கு பொது அதிகாரம் கொடுத்துள்ளேன். எனது தந்தை தான் இவற்றை நிர்வகித்து வருகிறார்.
பத்திரிக்கைகளில் சமையல்காரர் சுப்பையா என்று கூறுவது மிக மிக வேதனைக்குரியது. சுப்பையா ஒரு தொழில்முனைவர், வருமான வரி கட்டுபவர், எங்கள் நிறுவனத்தில் சப் கான்ட்ராக்டராக தொழில் செய்து வருகிறார். மேலும் சுப்பையா என்ற பெயரில் எனக்கு சமையல்சாரரோ,உதவியாளரோ இல்லை. வேறு எந்த பினாமி பெயரிலும் எங்கள் நிறுவனத்தினர் தொழில் நடத்தவில்லை என்பதையும் தெளிவாக வலியுறுத்துகிறேன்.
ஏப்ரல் 7ம் தேதி எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும் வருமான வரி சோதனை நடந்தது. தொடர்ந்து 3 முறை சம்மன் அனுப்பப்பட்டது. 3 முறையும் நான் சட்டத்திற்கு உட்பட்ட குடிமகன் என்ற முறையில் காலதாமதம் இன்றி வருமான வரித்துறை அலுவலகத்திற்கு சென்று முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்துள்ளேன். அதில் நான் சட்ட தீரியாக எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை விரைவில் நிரூபிப்பேன்.
தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி அறிக்கை விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் செயல் கண்டிக்கத்தக்கது. இளம் வயதிலேயே ஜெயலலிதா ஆசியுடன் 3 முறை சட்டசபை உறுப்பினராவும், 2 முறை அமைச்சராகவும் பொறுப்பேற்று வேகமாகவும், துடிப்பாகவும் செய்து வருகிறேன். இதனால் எதிர்க்கட்சித்தலைவர் சேற்றை வாரி இறைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்த விமர்சனங்களைத் தாண்டி நான் நிரபராதி என்பதை நிரூபிக்கும் நாள் தொலைவில் இல்லை. அந்த மனப்பக்குவத்தையும், எதையும் தாங்கும் மன தைரியத்தையும் புரட்சித் தலைவி அம்மா அதிகமாகவே எனக்குள் விதைத்துள்ளார்.
குட்கா பிரச்னையில் சொல்லப்படும் மாதவராவ் என்பவர் யார் என்பது எனக்கு தெரியாது. இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இரசியல் காழ்ப்புணர்ச்சியால் புணையப்பட்ட குற்றச்சாட்டு, இதை சட்டரீதியாக எதிர்கொள்வேன்,
ஜெயலலிதா ஆசியுடன் நல்ல மறையில் செயல்பட்டு வரும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவும், எனக்கு நெருக்கடி கொடுத்து என்னை அரசியலில் இருந்து அழித்து விடலாம் என்ற எண்ணத்தோடு சேற்றை வாரி இறைத்து வருகிறார் ஸ்டாலின். அவரது கனவு ஒரு போதும் பலிக்காது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். கூவிக் கூவி அரசியல் களத்தில் அவர் அவிழ்த்துவிடும் பொய் மூட்டைகள் விலை போகாது.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசும் இவரும், இவரது குடும்பமும்தான் ஊழலின் ஊற்றுக்கண் என்பதை நாடறியும். கடந்த காலத்தில் கலைஞர் டிவியின் 200 கோடி பணப்பரிவர்த்தனை, இந்தியாவின் மிகப்பெரிய ஆதாரமிக்க 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்குகள், முறைகேடான பிஎஸ்என்எல் தொலைதொடர்பு கேபிள் இணைப்புகள், பெரம்பலூர் சாதிக் பாட்சா மரணம், அண்ணா நகர் ரமேஷ் தற்கொலை, மதுரையிலே பத்திரிக்கை எரிப்பின் காரணமாக 3 பேர் மரணம் என்பதை எல்லாம் மக்கள் ஒரு போதும் மறக்கவில்லை என்பதை மறந்து விட்டு ஸ்டாலின் பேச வேண்டாம்.
இந்திய வரலாற்றில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழலான 2 ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை முறைகேட்டில் ஈடுபட்ட குடும்பம் ஸ்டாலின் குடும்பம். நீதிபதி சர்க்காரியா அவர்களால் 40 ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்த கட்சி திமுக. அந்தக் கட்சியின் செயல்தலைவர் என்பதை ஸ்டாலின் மறந்துவிட்டு பேசவேண்டாம்.
மக்களுக்காக முழுநேரமும் சுன்று பணியாற்றிக் கொண்டிருக்கும் அரசின் திட்டங்களையும் இந்திய அளவ்ல முதன்மையான நம் மக்கள் நல்வாழ்வுத் துறையின் நற்பணிகளையும் வேகத்தையும் முடக்கி விடலாம் என மனப்பால் குடிக்கிறார். இவரின் திசை திருப்பும் முயற்சி ஒரு போதும் நடக்காது என்பதை திட்டவட்டதாக தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டாலினுக்கு ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் காலம் தனது கணக்கை சரியாக முடிக்கும், என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார்.