சென்னையில் ஒருநாள்… ஆம்புலன்ஸில் பறந்த இதயம்: பரபரப்பான அந்த நிமிடங்கள்...
சென்னை: மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம், சென்னை அரசு பொது மருத்துவமனையில் இருந்து, 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடையாறு மலர் மருத்துவமனைக்கு, 13 நிமிடத்தில், ஆம்புலன்ஸ் வேனில் கொண்டு செல்லப்பட்டு, மும்பையைச் சேர்ந்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம், பழையனூரைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி; கிராம சுகாதார செவிலியர். இவரது மகன் லோகநாதன், 27. இன்ஜினியரிங் டிப்ளமா முடித்து, வேலை தேடி வந்தார். கடந்த, 11ம் தேதி, உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்தோருக்கு, குளிர்பானம் வாங்கச் சென்றவர், லாரியில் அடிபட்டார்.இந்த நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின், சென்னை, அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
நான்கு நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலை, மூளைச்சாவு நிலையை அடைந்தார்.இது குறித்து, தாய் ராஜலட்சுமி உள்ளிட்ட உறவினர்களிடம், டாக்டர்கள் விவரித்தனர். இதையடுத்து, லோகநாதனின் உடல் உறுப்புக்களை தானம் அளிக்க, உறவினர்கள் முன் வந்தனர்.உடல் உறுப்பு தானம் கோரி விண்ணப்பித்துள்ளோர் விவரங்கள், மருத்துவமனைகள் மூலம் தொடர்பு கொள்ளப்பட்டு, யார் யாருக்கு, இந்த உறுப்புகள் பொருந்தும் என, இறுதி செய்யப்பட்டது.இதன்படி, சென்னை, அடையாறில் உள்ள, மலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், மும்பையைச் சேர்ந்த ஹவோவி, 21, என்ற பெண்ணிற்கு, இதய மாற்று அறுவை சிகிச்சை நடத்த திட்டமிடப்பட்டது.

திங்கட்கிழமை மாலை
சென்னையில் திங்கட்கிழமை மாலையில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. மாலை 6.45 மணிக்கு அனைத்து சிக்னல்களிலும் ஒரே நேரத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதயமாற்று அறுவைசிகிக்சைக்காக இதயம் ஒன்றினை சுமந்துகொண்டு அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் புறப்பட்டது.

11 சிக்னல்கள் 6 வேகத்தடைகள்
ஆம்புலன்ஸ், கோட்டை ரயில் நிலையம், தீவுத்திடல், போர் வீரர்கள் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம், உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை, காந்தி சிலை, கலங்கரை விளக்கம், சாந்தோம், பட்டினப்பாக்கம், சத்யா ஸ்டுடியோ ஆகிய 11 சிக்னல்களையும், வழியில் இருந்த 6 வேகத்தடைகளையும் கடந்து தனியார் மருத்துவமனையை அடைந்தது.

11 கிலோமீட்டர்பயணம்
மாலை 6.44 மணிக்கு புறப்பட்ட ஆம்புலன்ஸ் சரியாக 6.57 மணிக்கு அடையாறு மருத்துவமனையை வந்தடைந்தது. இந்த வழித்தடத்தின் தூரம் 11 கி.மீ. இந்த தூரத்தை கடக்க எடுத்துக்கொண்ட நேரம் 13 நிமிடங்கள், 22 விநாடிகள்.

கட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து
மதியம் 3 மணிக்கே போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது. 4 மணிக்கு இதயம் கொண்டு போவதாக கூறப்பட்டது. அப்போது பள்ளி விடும் நேரம் என்பதால் அறுவைசிகிச்சை நேரம் மாற்றிவைக்கப்பட்டது. ஆனாலும் மாலையில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நேரத்தில் பிரச்சினை ஏதும் ஏற்படவில்லை.

11 சிக்னல்களிலும் பரபரப்பு
அரசு மருத்துவமனையில் இருந்து அடையாறு தனியார் மருத்துவமனை வரை இருந்த 11 சிக்னல்களும் ஆம்புலன்ஸ் செல்லும்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு சிக்னலிலும் வயர்லஸ் கருவியுடன் போலீஸார் தொடர்பில் இருந்து ஆம்புலன்ஸ் வரும் செய்தியறிந்து போக்குவரத்தை சரிசெய்தனர்.

வழிநடத்திய போலீஸ் வாகனம்
ஆம்புலன்ஸ் வாகனம் முன்னால் சென்ற போலீஸ் வாகனத்தை காவலர் பாலாஜி ஓட்டி சென்றார். ஆய்வாளர் செல்வராஜ், உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் ஆகியோர் போலீஸ் வாகனத்தில் அமர்ந்து போக்குவரத்து தகவல்களை கேட்டு வழிநடத்திச் சென்றனர்.

220 போலீசார்
ஆம்புலன்ஸ் செல்லும்போது இணைப்பு சாலைகளில் இருந்து யாரும் குறுக்கே வந்துவிடக் கூடாது என்பதற்காக அந்த இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. போக்குவரத்தை முழுவதும் நிறுத்தி பொதுமக்களை பாதிக்காமல், சாலையின் ஓரத்தில் மற்ற வாகனங்கள் செல்ல சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் 220 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு
போக்குவரத்தில் மாற்றம் செய்தபோது யாரோ முக்கியத் தலைவர்கள் வரப்போகிறார்கள் என்று நினைத்த மக்கள், ஆம்புலன்ஸ் செல்வதற்காகத்தான் காவல்துறையினர் இந்த நடவடிக்கையில் இறங்கியிருப்பதை அறிந்து அவர்களுக்கு பெரிதும் பாராட்டு தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு வாழ்த்து
அரசு பொது மருத்துவமனையில் இருந்து கடற்கரை சாலை வழியாக அடையாறு ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு 13.22 நிமிடங்களில் ஆம்புலன்ஸை ஓட்டிவந்தார் ஓட்டுநர் கதிர். அவர் வந்தவுடன் மருத்துவமனையில் குழுமியிருந்த மக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

உயிரை காப்பாற்றுவதில் உதவி
செய்தியாளர்களிடம் பேசிய ஆம்புலன்ஸ் டிரைவர் கதிர், ‘‘சுமார் 90 முதல் 100 கி.மீட்டர் வேகத்தில் வண்டியை ஓட்டினேன். இதற்கு போக்குவரத்து போலீஸும், மருத்துவமனையும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இதனால், திட்டமிட்ட நேரத்தைவிட, முன்னதாகவே வந்தடைய முடிந்தது. உயிரை காப்பாற்றுவதற்கு நானும் உதவியாக இருந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார்.

பார்வையிட்ட உயரதிகாரிகள்
இந்த பயணத்தை சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ், போக்குவரத்து கூடுதல் ஆணையர் கருணாசாகர் மற்றும் உயர் அதிகாரிகள் தங்கள் அறையில் இருந்து வீடியோ காட்சிகள் மூலம் ஆம்புலன்ஸ் பயணம் செய்வதைப் பார்வையிட்டனர்.

வேலூருக்கு சென்ற கல்லீரல்...
லோகநாதனின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம் ஆகியவை வரிசையாக அகற்றப்பட்டன. இறுதியாக கண்கள் அறுவைச் சிகிச்சை செய்து எடுக்கப்பட்டன. இதில் 6-ல் இருந்து 8 மணி நேரத்துக்குள் பொருத்தப்படவேண்டிய கல்லீரல், வேலூர் சிஎம்சி மருத்துவ மனைக்கு ஆம்புலன்சில் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

சிறுநீரகங்கள், கண்கள்
இரு சிறுநீரகங்களும், இதயம் அனுப்பப்பட்ட சென்னை ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. அவை இரு நபர்களுக்கு, 12 மணி நேரத்துக்குள் பொறுத்தப்பட்டது. லோகநாதனின் கண்கள், அரசு கண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. தோல், தீக்காயம் ஏற்பட்டவர்களுக்காக கீழ்ப்பாக்கம் ரைட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஹிதேந்திரன் தொடக்கிவைத்தது
சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த சிறுவன் ஹிதேந்திரன் இதேபோல் விபத்தில் சிக்கி, சென்னை அப்பல்லோ மருத்து வமனையில் சேர்க்கப்பட்ட பிறகு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது உடல் உறுப்புக்களை பெற்றோர் தானமாக கொடுத்தனர்.

சென்னையில் பரபரப்பு
இதைத் தொடர்ந்து, போக்குவரத்தை முழுவதுமாக நிறுத்த ஏற்பாடு செய்த போலீஸார், சில நிமிடங்களில் முகப்பேரில் உள்ள செரியன் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவினர். அங்கு ஒரு பெண்ணுக்கு வெற்றிகரமாக இதயம் பொருத்தப்பட்டது. அந்நிகழ்வு, உடல் உறுப்பு தானத்தைப் பற்றிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சென்னையில் ஒருநாள் என்ற திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது. அதேபோல இந்நிகழ்வும் சென்னை நகரில் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்தது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications