ஆந்திரா, தெலுங்கானாவில் கொளுத்தும் வெயில்... மெஹபூப் நகரில் ஒரே வாரத்தில் 28 பேர் பலி
ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் வெயிலின் கொடுமைக்கு இதுவரை 111 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக மெஹபூப் நகரில் 28 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சேலம், தருமபுரி, நெல்லை உள்பட பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி விட்டது. வருகிற மே முதல் வாரத்தில் அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. இந்த கத்தரி வெயிலின் தாக்கம் மே இறுதி வரை நீடிக்கும். அக்னி நட்சத்திரத்தின் போது வெயில் 110 டிகிரியை எட்டி விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தை விட ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெயிலின் தாக்கம் இன்னும் உக்கிரமாக உள்ளது. ஏப்ரல் மாதம் துவங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கிறது.
தெலுங்கானாவிலும் ஆந்திராவிலும் அதிகபட்ச வெயில் காரணமாக அனல் காற்று வீசுகிறது. இந்த அனல் காற்றில் பாதிக்கப்பட்டு தெலுங்கானாவில் மட்டும் 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல், ஆந்திர மாநிலத்திலும் இதுவரை வெயிலுக்கு 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெலுங்கானவில் அதிகபட்சமாக மெஹபூப் நகரில் 28 பேரும், மேடக் மாவட்டத்தில் 11 பேரும் பலியாகி உள்ளனர். மேலும் உயிரிழப்புக்களை தடுக்க, வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு டிப்ஸ் வழங்குவதற்காக புதிய மொபைல் ஆப்ஸ் ஒன்றை உருவாக்க தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.
தெலுங்கானாவில் தற்போது சராசரியாக 40 டிகிரி வெயில் இருந்து வருகிறது. இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
2015ம் ஆண்டு கோடை காலத்தின் போது கடும் வெயிலுக்கு தெலுங்கானாவில் 486 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.