கொடைக்கானலில் பலத்த மழை: நட்சத்திர ஏரி பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கொடைக்கானல்: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரி நிரம்பியுள்ளது. ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே திடீர் அருவிகள் தோன்றியுள்ளன. அங்குள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. ஒரு சில இடங்களில் லேசான மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானலில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் சுற்றுலா இடங்களில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் கனமழையால் குடிநீர் ஆதாரமாக விளங்கும் மனோரத்தினம் சோலை அணை, 34 அடியை எட்டியுள்ளது. இதேபோன்று அங்குள்ள நட்சத்திர ஏரியும் நிரம்பி உள்ளது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஏரிக்கான நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், நீர் திறப்பும் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கனமழை காரணமாக கொடைக்கானலில் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற உத்தரவிடப்பட்டதை அடுத்து, மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications