குமரி மாவட்டத்தில் வெளுத்துக் கட்டும் கன மழை.. பெரும் தவிப்பில் மக்கள்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கழ மழையால் மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு இடம் பெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நேற்று காலை முதல் பெய்த கன மழை விடாமல் இரவிலும் தொடர்ந்து அடை மழையாக பெய்ததால் நாகர்கோவில் ஸ்தம்பித்தது. ஒரே நாளில் அங்கு 12 செமீ மழை பெய்தது.
அடை மழை காரணமாக, போலீஸ் நிலைய ரோடு, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, கோட்டார் சாலைகளை மூழ்கடித்து வெள்ளம் சென்றதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். பொதுமக்களும் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கொட்டாரம், அகஸ்தீஸ்வரம், சந்தையடி, ஈச்சன்விளை, புன்னையடி, புவியூர், தென்தாமரைகுளம், சாமித்தோப்பு, கன்னியாகுமரி, மகாதானபுரம் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
அகஸ்தீஸ்வரம் கீழ சாலை, நடு சாலை, அம்மன் கோவில் சாலை மற்றும் சமாதான புரம் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்கும் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.
இன்று காலையிலும் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் வடியாததால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். பால்குளம், சாமித்தோப்பு பகுதிகளில் உள்ள உப்பளங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. தென்னந்தோப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குளச்சல், குருந்தன்கோடு, கோழிப்போர் விளை, முள்ளங்கினா விளை, ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் மழை பெய்தது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூரை உலுக்கிய மழை நின்று போய் விட்ட நிலையில் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.