கத்திப்பாரா மேம்பாலத்துக்கே பூட்டு போட்ட இளைஞர்கள்! முடங்கியது சென்னை போக்குவரத்து!
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திபாராவில் நடைபெறும போராட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திபாராவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் தமிழக விவசாயிகள் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 31வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை பிரதமர் மோடி விவசாயிகள் போராட்டம் குறித்து வாய்திறக்கவில்லை. விவசாயிகளை சந்திக்கும் மத்திய அமைச்சர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரதான் முயற்சிக்கிறார்களே தவிர கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கவில்லை.

மேம்பாலத்துக்கு பூட்டு
விவசாயிகளின் போராட்டத்தை இதுவரை மத்திய அரசு கண்டுகொள்ளாத நிலையில், சென்னை கத்திப்பாரா பாலத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலதுக்கு பூட்டுப்போட்டு போக்குவரத்துக்கு தடையை ஏற்படுத்தி மாணவர் அமைப்பினர் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

நீண்ட வரிசையில் நின்ற வாகனங்கள்
இந்த திடீர் போராட்டத்தால் கத்திப்பாரா பகுதியில் பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தன.

முக்கிய சாலைகள் முடங்கின
கிண்டி வழியாக சென்னைக்குள் எந்த வாகனமும் போக முடியாத சூழல் ஏற்பட்டது. கிண்டி, விமானநிலையம் மற்றும் வடபழனி செல்லும் சாலைகள் அனைத்தும் முடங்கியது.

வெளியே செல்ல முடியாத நிலை
சென்னையிலிருந்து எந்த வாகனமும் வெளியேற முடியாத நிலை உருவானது. இதனால் விமான நிலையம் செல்வோர் அலுவலகம் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

போக்குவரத்து ஸ்தம்பித்தது
சென்னையின் முக்கிய ஜங்கஷனான கத்திப்பாரா மேம்பாலத்தில் சுமார் 45 நிமிடங்கள் நடந்த இந்தப்போராட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து பூட்டை பெரும் பாடுபட்டு உடைத்த போலீசார் வாகனங்கள் செல்ல வழியை ஏற்படுத்தி தந்தனர்.












Click it and Unblock the Notifications