ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானதை எதிர்த்த வழக்கு- ஹைகோர்ட்டில் டிஸ்மிஸ்
18 வருடங்களாக நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளார். 4 ஆண்டு தண்டனை பெற்றதால் தானாகவே அவரது பதவி பறிபோய் விட்டது. இதையடுத்து புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றுள்ளார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் பதவி ஏற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி வழக்கறிஞர் பிரபாகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர், ‘வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக முதலமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த மாதம் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து, ஜெயலலிதா தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. மாறாக ஆளும் அ.தி.மு.க. சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டப்பட்டு, அதில் அடுத்த முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். இதனடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக தமிழக கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். இந்த முதலமைச்சர் தேர்வு நடைமுறைகள் சட்டப்படி நடைபெறவில்லை.
ஜெயலலிதாவின் முதலமைச்சர் பதவி பறிபோனதும், இந்திய தேர்தல் ஆணையத்துடன் கலந்து ஆலோசனை செய்து தமிழக கவர்னர், முதலமைச்சர் பதவி காலியாக உள்ளதாக அறிவிக்க வேண்டும். அதன்பின்னர், புதிய முதலமைச்சரை நியமித்து இருக்க வேண்டும். எனவே, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பதவி விலகலில் முறையான நடவடிக்கைகள் பின்பற்றப் படவில்லை. அதனால், முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர், இந்த வழக்கை மனுதாரர் தொடர்வதற்கு அவருக்கு அடிப்படை உரிமை இல்லை என்பதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.