மாணவர்களை அடிக்கவே "ரைட்ஸ்" இல்லை.. இதில் ஆசிரியைக்கு "பளார்" விட்ட தலைமை ஆசிரியை!
நாகர்கோவில்: நாகர்கோவில் வகுப்புக்குள் புகுந்த தலைமை ஆசிரியை ஒருவர், அத்தனை மாணவ, மாணவியல் முன்னிலையில் ஓவிய ஆசிரியையை பளார் என கன்னத்தில் அறைந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பள்ளியில்தான் இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள அரசுப் பள்ளியில் நேற்று மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வு நடைபெற்றது. இதற்காக பள்ளி தயார்படுத்தப்பட்டது.
4வது பாட வேளையின்போதுதான் இன்ஸ்பெக்ஷன் நடைபெறவிருக்கும் தகவல் வந்தது. இதையடுத்து அனைத்து வகுப்புகளையும் சுத்தப்படுத்தவும், தயார் நிலையில் இருக்குமாறும் ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியை அறிவுறுத்தியிருந்தார். அப்போது 8ம் வகுப்பைச் சேர்ந்த ஓவியை ஆசிரியை தனது வகுப்பை சுத்தமாக்கும் வேலையில் மாணவர்களுடன் சேர்ந்து ஈடுபட்டிருந்தார்.
அந்த சமயத்தில் அங்கு வந்த தலைமை ஆசிரியை இன்ஸ்பெக்ஷன் நடக்கப் போகிறது. இன்னும் என்ன சத்தம் இந்த நேரத்தில் என்று கேட்டபடி ஓவிய ஆசிரியையை கன்னத்தில் பளார் என அறைந்து விட்டார். இதை எதிர்பார்க்காத ஆசிரியையும், மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதிர்ச்சி அடைந்த ஆசிரியை உடனடியாக வகுப்பறையை விட்டு வெளியேறினார். மாவட்ட கல்வி அதிகாரியைச் சந்தித்து புகார் கொடுத்தார். 20 வருடமாக பணியாற்றி வருகிறேன். நான் பணியாற்றிய அனைத்துப் பள்ளிகளும் சிறப்பாக பணியாற்றியதற்காக பாராட்டு வாங்கியுள்ளேன். இப்படிப்பட்ட அவமானத்தை எங்குமே நான் சந்தித்ததில்லை. ஏன் அடித்தீர்கள் என்று கேட்டால் தலைமை ஆசிரியை மெமோ கொடுப்பதாக மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஓவிய ஆசிரியை கோரியுள்ளார்.
இதுகுறித்து கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வகுப்பில் மாணவர்களை அடிக்கவே தடை உள்ளது. இந்த நிலையில் ஆசிரியைக்கு தலைமை ஆசிரியை கொடுத்த அடி கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.