திணறுகிறது ஊட்டி.. தொடர் விடுமுறை.. குவியும் சுற்றுலா பயணிகள்.. வரவேற்கும் குறிஞ்சி பூக்கள்
விடுமுறை காரணமாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.
ஊட்டி: பள்ளி காலாண்டு முடிந்ததால் சுற்றுலா பயணிகள் கூட்டம் ஊட்டியில் அதிகரித்து வருகிறது. இதில் முகரம் பண்டிகையும் லீவும் சேர்ந்து கொண்டதால் ஊட்டி நகரமே திக்குமுக்காடி போய் உள்ளது.
தற்போது ஊட்டியில் 2-வது சீசன் தொடங்கி உள்ளது. பள்ளி விடுமுறையுடன் முகரம் விடுமுறையும் என 2 சந்தர்ப்பம் சேர்ந்துகொண்டதால், ஏராளமான மக்கள் குடும்பத்துடன் ஊட்டிக்கு வர ஆரம்பித்துள்ளனர்.

கூட்டம் அதிகரிப்பு
இதனால் சுற்றுலா தலங்களான தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ஊட்டி லேக், இத்தாலியன் பார்க், ஜப்பான் பார்க் என அனைத்து இடங்களிலும் மக்கள் தலையாகவே உள்ளது. கடந்த இரு தினங்களாக இந்த கூட்டம் அதிகரித்துள்ளது. குடும்பத்துடன் வரும் மக்கள் அனைவரும் ஊட்டியை கண்டு களித்து வருகிறார்கள்.

ஊட்டி சாக்லேட்
ஊட்டியில் ஹோம் மேட் சாக்லேட் பிரபலம் என்பதால் அனைத்து சாக்லேட் கடைகளின் முன்பும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முண்டியடித்து நிற்கின்றனர். அதேபோல ஊட்டி பழங்களுக்கு எப்பவுமே தனி மவுசு. கிவி, மங்குஸ்தான், ரம்பூட்டான் போன்ற பழங்களை சுற்றுலா பயணிகள் வாங்கி ருசித்தனர்.

கடமான்களின் அழகு
படகு சவாரி, குதிரை சவாரி என சுற்றுலா பயணிகள் ஒன்றையும் விடவில்லை. இந்த படகு சவாரி போகும்போது அங்கே நிறைய கடமான்கள் புற்களை மேய்ந்து கொண்டிருக்கும். இதனை கண்டு மக்கள் குதூகலித்தனர். செல்லும் இடங்களில் எல்லாம் அனைவரும் செல்பியை மட்டும் எடுக்க தவறவே இல்லை. ஊட்டிக்கு மக்கள் படையெடுத்து வருவதால் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

வரவேற்கும் குறிஞ்சி பூக்கள்
எனினும் 2-வது சீசனுக்கு மக்கள் வருவார்கள் என்பதை அறிந்த மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே வாகன நிறுத்தம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய துவங்கிவிட்டது. கூட்டம் கூட்டமாக படையெடுத்து வரும் சுற்றுலா பயணிகளை 12 வருடத்திற்கு ஒரு முறை பூத்து வரும் நீல குறிஞ்சி மலர்கள் தினந்தோறும் இனிதே வரவேற்று வருகிறது.












Click it and Unblock the Notifications