வருவாய் அதிகரிக்கவில்லை, சலுகைகள் அறிவிக்க வேண்டும்... என்ன செய்யப் போகிறார் ஜேட்லி?
மத்திய அரசின் வருவாய் அதிகரிக்காத பட்சத்தில் பட்ஜெட்டில் புதிய சலுகைகள் இருக்குமா என்ற சந்தேகம் நிலவுகிறது.
சென்னை : பாஜக ஆட்சிக் காலத்தில் கடைசி முழுமையான பட்ஜெட் என்பதால் சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் மக்கள், ஆனால் வருவாய் அதிகரிக்காத பட்சத்தில் இந்த நிலைமையை நிதியமைச்சர் அருண்ஜேட்லி எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற கேள்வி நிலவுகிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்குமா பட்ஜெட் அறிவிப்புகள்.
பாஜக அரசின் 5 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருகிறது, அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் மத்திய அரசு நாளை தாக்கல் செய்யும் பட்ஜெட் தான் முழு பட்ஜெட்டாக இருக்கும். இதன் பிறகு இடைக்கால பட்ஜெட்டுகள் மட்டுமே தாக்கல் செய்யப்படும். கடந்த பட்ஜெட்டின் போதே ஜிஎஸ்டி வரி, பணமதிப்பிழப்பு காரணங்களால் புதிய சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இதே போன்று வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் வரும் என்று கடந்த ஆண்டே மக்கள் எதிர்பார்த்த நிலையில் அது குறித்த அறிவிப்பு கடந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. எனவே இந்த பட்ஜெட்டில் நிச்சயம் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
சலுகை அறிவிக்க வேண்டும்
அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசும் மக்களை ஈர்க்க சலுகைகளை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆனால் வருவாய் உயராத நிலையில் இது எப்படி சாத்தியமாகும் என்பதே இப்போதைய கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக கடந்த ஓராண்டில் நாடு சந்தித்த மிக முக்கிய பிரச்னை விவசாயிகள் மரணம். எனவே இந்த ஆண்டு பட்ஜெட்டில் விவசாயத்தை ஊக்குவிக்க கண்டிப்பாக கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது அரசுக்கு.
கார்ப்பரேட் வரி குறைப்பு
இதே போன்று பெரு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரியை 5 சதவீதம் குறைப்பதாக அளித்த உறுதியை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் அருண்ஜேட்லிக்கு உள்ளது. கார்ப்பரேட் வரியை குறைக்காத பட்சத்தில் சர்வதேச சந்தையில் இந்திய நிறுவனங்கள் போட்டியிடும் திறன் குறைவதற்கான அபாயமும் உள்ளது.
அந்நிய செலாவணி பற்றாக்குறை
கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் டாலர்களை அள்ளிக் கொடுத்து பீப்பாய்களாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் அந்நிய செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டு அது நடப்பு கணக்கு பற்றாக்குறை என்று மற்ற இறக்குமதிகளை பாதிக்கும் அபாயம் உள்ளது.
ஜேட்லிக்கு நெருக்கடி
இதே போன்று சாமானியர்களுக்கும் பெட்ரோல், டீசல் விலை கழுத்தை நெரித்து வருகிறது. சங்கிலித் தொடர் போல பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மற்ற பொருட்களின் விலையும் ஏற்றம் கண்டு வருகிறது. எனவே நிதிச்சுமையை கூட்டாமல் வளர்ச்சியை கட்டுக்குள் வைத்து பட்ஜெட்டை திட்டமிட வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார் அருண்ஜேட்லி. ஜேட்லியின் இந்த பட்ஜெட் மக்களை ஈர்க்கும் வகையில் அமையாவிடில் தேர்தலில் அதன் பலனை காண நேரிடும் என்பதால் ஜேட்லிக்கு இது சவாலான பட்ஜெட்டாகவே இருக்கிறது.