பணமோசடி வழக்கில் முன்னாள் அதிகாரி கைது: மனைவி, மகள்கள் தற்கொலை
சென்னை: வேலை வாங்கித் தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் வாங்கி ஏமாற்றிய வழக்கில் கைதான ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் மனைவி, மகள்கள் இன்று காலை தற்கொலை செய்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்தவர் தேவராஜன். இவர் சிதம்பரத்தில் வருவாய் ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்றவர். பணியிலிருக்கும் போது மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் வாங்கியதாக, தேவராஜன் மீது கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு துறையில் பணியாற்றும் விரிவாக்க அலுவலர் மனோகரன் என்பவர், தேவராஜன் மீது புகார் கொடுத்துள்ளார். அதில், தேவராஜன் மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறியதன் பேரில் 40 லட்சம் ரூபாயை அவரிடம் கொடுத்தாக கூறியுள்ளார். இந்த புகாருக்குப் பிறகு தேவராஜன் குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டார்.
சென்னையில் மைத்துனர் திருநாவுக்கரசு என்பவரின் வீட்டில் தேவராஜன் குடும்பத்துடன் தங்கி இருந்தார். தேவராஜனை கடலூர் போலீஸார் கடந்த 3ம் தேதி கைது செய்தனர். அப்போது அவரது மனைவி உஷாராணி, மகள்கள் கலைவாணி, விஜயலட்சுமி ஆகியோரிடம் போலீசார் விசாரித்துள்ளனர்.
மாடிப்பகுதியில் குடியிருந்த அவர்களது வீட்டின் கதவு இன்று திறக்கப்படாமல் இருந்தது. நீண்ட நேரமாகியும் அவர்கள் தங்கி இருந்த அறை திறக்கப்படாததால் உறவினர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, மூவரும் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்த கலைவாணியும், விஜயலட்சுமியும் முதுகலை பட்டதாரி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேவராஜனுக்கு தற்கொலை தகவலை போலீசார் சொல்லி இருக்கிறார்கள். அவர், சிறையிலேயே மனம் உடைந்து கதறி அழுதார்.
தேவராஜனுக்கு சிவபாலன் என்ற மனவளர்ச்சி குன்றிய மகன் உள்ளார். மூவரும் தற்கொலை செய்ய முடிவு செய்த போது சிவபாலனை மட்டும் அவர்கள் விட்டுவிட்டனர். சிவபாலன் தூங்கிய பிறகு அவர்கள் மூவரும் தற்கொலை செய்துள்ளனர். ஆதரவற்ற நிலையில் சிவபாலன் இப்போது அங்கு இருக்கிறார்.
அரசு அதிகாரியாக தேவராஜன் பணியாற்றினாலும், தகுதிக்கு மீறி பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டதால் அவரது குடும்பமே தற்கொலை செய்து கொண்டனர் என்கிறது காவல்துறை வட்டாரம்.