நானா முட்டுக்கட்டை போடுறேன்.. கே.பி.முனுசாமி ஆவேசம்
அதிமுக இணைப்புக்கு நான் முட்டுக்கட்டை போடுவதாக கூறுவது தவறு. நான் தடை போடவில்லை என்று முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தெரிவித்தார்.
சென்னை: அதிமுக இணைப்புக்கு நான் தடை இல்லை என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கேபி முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கு தயாரான போது ஓபிஎஸ் 2 நிபந்தனைகள் விதித்ததால் அந்த இணைப்பு நடைபெறாமல் போனது. அதாவது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியிலிருந்து ஒதுக்க வேண்டும். ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை அமைக்க வேண்டும் என்பதாகும்.
இந்த இரு நிபந்தனைகளுக்கு முதலில் எடப்பாடி அணியினர் ஒப்புக் கொள்ளவில்லை. அதன்பின்னர் தினகரன் ஆதிக்கத்தால் அதிர்ச்சி அடைந்த அந்த அணியினர் தினகரனை ஒதுக்கி வைக்கும் முடிவை எடுத்தனர்
எடப்பாடியின் தீர்மானம்
அதன்படி தினகரனை கட்சி அலுவலகத்துக்குள்கூட நுழைய விடாமல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் துணை பொதுச் செயலாளராக தினகரனின் நியமனம் செல்லாது என்று எடப்பாடி அணியினர் தீர்மானம் நிறைவேற்றினர்.
தினகரனை சமாளிக்க...
எனினும் தினகரன் தனக்கு இருக்கும் செல்வாக்கை நிரூபிக்க மேலூரில் பொதுக் கூட்டத்தை கூட்டினார். முதல்வர் உள்பட அமைச்சர்கள், தீர்மானங்களில் கையெழுத்திட்டவர்களை ஏசினார். இதனால் அவரை சமாளிக்க எடப்பாடி பழனிச்சாமி ஒரு யுத்தியை கையாண்டார். அதுதான் அதிமுக இணைப்பு.
ஒரு கோரிக்கை மட்டும்
ஓபிஎஸ் கோரிய ஒரு கோரிக்கையை நிறைவேற்றிய எடப்பாடி அணியினர், அணிகள் இணைப்புக்கு வித்திடும் 2-ஆவது கோரிக்கையையும் நிறைவேற்றுவதாக அறிவித்தனர். அதன்படி ஜெயலலிதாவின் மரணத்தை ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரிக்கப்படும் என்ற அறிவிப்பை வியாழக்கிழமை அறிவித்தார்.
அதிமுக இணைப்பு
இதையடுத்து இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கின. நேற்று இரவு ஜெயலலிதா சமாதியில் இணைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அது நடக்காமல் போய் விட்டது.
இழுபறி நிலை
அணிகள் இணைப்பு குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதேபோன்று முதல்வர் பழனிசாமி, முக்கிய அமைச்சர்களுடன் தனது கிரீன்வேஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். இதனிடையே, இணைப்புக்கு முனுசாமிதான் முட்டுக்கட்டையாக உள்ளதாக பேச்சுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து கேபி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
முட்டுக்கட்டை
அப்போது அவர் கூறுகையில், அதிமுக அணிகள் இணைப்புக்கு நான் தடையாகவும் இல்லை, முட்டுக்கட்டையாகவும் இல்லை. சசிகலாவை வெளியேற்ற வேண்டும் என்பதுதான் மூலக்கரு. ஓபிஎஸ் எடுக்கும் முடிவுக்கு முழுமையாக கட்டுப்படுவோம் என்றார் அவர்.